புதன், 7 செப்டம்பர், 2016

அவனும்தான் வாழட்டுமே..



விவசாயிகளுக்கு இயற்கையால், அரசாங்கத்தால், சிறு வியாபாரிகளால் ஏற்படும் சங்கடங்கள் முதல் பன்னாட்டு கம்பெனிகளின் நீண்டகால திட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகள் வரை பல பிரச்சனைகளை பேசி விட்டோம்...

விவசாயிகளுக்கு மற்றவர்கள் தான் பிரச்சினையா...?? 

அப்படி சொல்ல முடியாது.. விவசாயிக்கு கூட இருக்கும் இன்னொரு விவசாயியே பிரச்சினை ஆகிறான்... இதை பற்றியும் கொஞ்சம் பேசுவோமே....

பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவன், அவனது வயலுக்கு பக்கத்தில் ஒரு ஏக்கர் வைத்திருப்பவனை அழிக்க நினைக்கிறான்.. ஒரு ஏக்கர் வைத்திருப்பவன் அவன் வயலுக்கு பக்கத்தில் கால் ஏக்கர் வைத்திருப்பவனை அழிக்க நினைக்கிறான்... இதற்கான முயற்சிகளை பல்வேறு தொல்லைகள் வடிவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்...

விளைந்த பொருட்களை வெளியில் ஏற்றி செல்ல விடாமல் வழியை மறைப்பார்கள்... வரப்புகளை சரித்து வெட்டி ஆள் கூட நடக்க முடியாத அளவு குறைபபர்கள்.... பயிர்கள் விளைந்து நிற்கும் வேளையில் ரகசியமாக ஆடு-மாடுகளை விட்டு மேய்ப்பார்கள்.... இப்படியான தொடர் தாக்குதல்கள் மூலம் அந்த சிறு விவசாயி "இவனுங்ககிட்ட கிடந்தது மல்லாடுறதுக்கு வித்து தொலைஞ்சுட்டு போகலாம் டா " என்ற விரக்தி மன நிலையில் இருப்பான்...

ஏதாவது ஒரு அவசர தேவைக்கு ( மகளின் திருமணத்திற்கோ- மருத்துவ செலவிற்கோ- வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கோ) நிலம் விற்பனை செய்ய நினைத்தால் சமயத்தை சாதகமாக்கிக்கொள்ளும் பெரு நிலக்கிழார்கள் அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள்.... இப்படி எல்லா விதத்திலும் நொந்து நூலாகி இருக்கும் குறு- சிறு விவசாயி என்ன செய்வான்...??

இப்படி விரக்தியான நிலையில் இருப்பவன் தான் பன்னாட்டு பெருவணிக நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைக்கு நிலம் தேடும்போது முதலில் தன்னுடைய நிலத்தை விற்பனை செய்வான்... பிறகு என்ன ஆகும்..?? கூடாரத்திற்குள் தலையை நுழைத்த ஒட்டகம் மாதிரி கடைசியில் எல்லோராயும் கபளீகரம் செய்வார்கள்...

இப்படி ஒரு வஞ்சிக்கப்பட்ட விவசாயியிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் பெருவணிக நிறுவனங்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் கோர முகம் கொண்டவை.... விற்க மறுப்பவர்களை முதலில் பணத்தால் வளைக்க முயல்வார்கள்... பெரும் பணம் கிடைத்த உடன் பெரும்பாலான விவசாயிகள் விற்பனைக்கு சம்மதிப்பார்கள்... இன்னும் சிலர் கடைசி வரை மறுப்பார்கள்... அன்று இவர்கள் பெருநிலக்கிழார்கள்...ஆனால்சுற்றி இருக்கும் மற்ற நிலங்களை பெருவணிக நிறுவனங்கள் வாங்கி சேர்த்த உடன் இப்போது இவர் சிறு விவசாயியின் நிலைக்கு வந்திருப்பார்.... அன்று இவர் என்ன விதமான இடைஞ்சல்களை கால் ஏக்கர் வைத்திருந்தவனுக்கு தந்தாரோ அதை விட ஆயிரம் மடங்கு அதிகமான இடைஞ்சல்களை இப்போது இவர் அனுபவிப்பார்... இன்னும் கூடுதலாக அந்த பெருவணிக நிறுவனங்களிடம் எலும்புத்துண்டுகளை பெற்றுக்கொண்ட உள்ளூர் ரவுடிகள் நேரடியாகவே மிரட்டுவார்கள்.. சமயங்களில் தாக்குதல்களும் நடக்கும்... கடைசியில் வேறு வழி இல்லாமல் இவரும் விற்க சம்மதிப்பார்...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்வார்.... இது தேவையா.. இது தேவையா....
பக்கத்தில் கால் ஏக்கர் வைத்திருப்பவனையும் அரவணைத்து வாழ வைத்திருந்தால் அவன் ஏன் ஒட்டகம் தலையை நுழைக்க சம்மதிக்கப்போகிறான்...??

விவசாயிகளிடம் இருக்கும் ஒரு கேவலமான புத்தி.. பக்கத்து வீட்டுக்காரன்/வயல்காரன் செத்து விட மாட்டானா... அவனுடைய நிலங்களும் நமக்கே சொந்தமாகி விடாதா என்ற பேராசை... அந்த கெட்ட எண்ணம் இவர்கள் அழிவிற்கு காரணம்....

இந்த எண்ணம் வசதி-வாய்ப்புகள் நிறைந்த பெரு விவசாயிகளுக்கு இருக்கும் வரை விவசாயிகளுக்குள் ஒற்றுமை என்பது சாத்தியமே இல்லை.... விவசயிகளுக்குள் ஒற்றுமை இல்லாத போது ஒட்டு மொத்த அழிவிற்கான வாசல் அகலத் திறக்கப்படுகிறது...

பக்கத்து வயல் காரன் / வீட்டுக்காரனும் வாழ வேண்டும் என்று எப்போது உணர்வார்களோ...!!!

புகைப்படம் - இணையத்தில் இருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக