சனி, 7 மார்ச், 2015

மாயன் காலண்டரோ- மாயி காலண்டரோ...

இந்த உலகம் அழியத்தான் போகிறது.. மாயன் காலண்டரோ- வெள்ளிக்கிழமைகளில் பாவமன்னிப்பு கோர கூப்பிடுபவர்கள் சொல்லும் படியா தெரியாது..ஆனால் செல்ஃபோனின் காரணமாய்  ஒரு நாள் நிச்சயம் இந்த உலகம் அழியத்தான் போகிறது.. எப்படி..??

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் அப்பு கமல் கதாபாத்திரம் வில்லன்களில் ஒருவரான அன்பரசு டெல்லிகணேஷ் கதாபாத்திரத்தை  கொலை செய்யும் காட்சியை நினைத்துப்பாருங்கள்.. "இது என்ன..." "கோலி.. ..." "நீ விளையாட்டா செஞ்ச வினை... இப்போ இந்த வினை செய்ற விளையாட்ட பார்க்கிறியா..?" என்பார்.. அந்த கோலிக்குண்டு பலூனை உடைத்து உருளைகளை உருட்டி அடுத்தடுத்து தொடர்வினையாய் விசையில் பொருத்தப்பட்ட அம்பை இலக்கு நோக்கி செலுத்தும்..
அந்த கோலி குண்டுதான் உங்கள் கையில்- என் கையில் இருக்கும் செல்ஃபோன் .. ஆனால் இந்த முறை இலக்கு... எதிரி இல்லை.. நாமே தான்...
உற்பத்தியை பெருக்குகிறேன் பேர்வழி என்று அதிக விளைச்சல் ஆசை காட்டி விவசாயியிடம் இருந்த விதை நெல்லை பிடுங்கியாயிற்று.. விவசாயம் செய்தாலும் கூட இன்றைய விவசாயியின் கையில் .. இல்லை  இல்லை... விவசாயிக்காக கடையில் இருப்பது  ஃபார்மேஷன் இரண்டு என்ற முறையில் ஆராய்ச்சிக்கூடங்களில் , மரபுப்பொறியியலை பயன்படுத்தி முளைப்புத் திறன்  நீக்கப்பட்ட விதைகள்.அதாவது கிராமத்தான் பாஷையில் சொன்னால் காயடிக்கப்பட்ட விதைகள்.. இவைகளை மறு தலை முறையை உருவாக்கவே இயலாது..
கோழிகளில் ஏற்கெனவே அப்படி செய்தாயிற்று.. முட்டைகோழிகள் இடும் முட்டையால் குஞ்சு பொரிக்க இயலாது... கறிக் கோழிகளால்  குஞ்சு உருவாக்க இயலாது.. 
மது- புகை- ரேடியேஷன் சமாச்சாரங்களால் மனிதனும் மறைமுகமாக அந்த இலக்கு நோக்கித்தான் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறான்..
இப்போது ஆபத்து இன்னும் அதி தீவிரமாய் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.. மௌனமாய்... மறை முகமாய்.. 
செல் ஃ போன் கதிர்வீச்சுக்களால்  சிட்டுக்குருவி இனத்தை அழித்தாயிற்று.. அடுத்தபடியாக அழிந்து கொண்டிருப்பவை பட்டாம் பூச்சிகளும் தேனீக்களும்.. இந்த பட்டாம் பூச்சிகளும் தேனீ க்களும்தான்  மகரந்த சேர்க்கை எனப்படும் தாவர உடலுறவை நடத்திவைத்து கருஊட்டும் ஜீவ அணுக்களை கடத்தும் வேலையை செய்பவர்கள்  .. இதற்காக இவைகளுக்கு மலர்கள் கொடுக்கும் கூலிதான் தேன்..
விவசாயி பயிரிடும்  செடி/கொடி/மர வகைகளின் விதைகளை ஃ பார்மேஷன் 2 கொண்டு அழித்தாயிற்று.. இயற்கையாய் முளைக்க கூடிய தாவர வகைகளின் இனப்பெருக்கம்  நடக்காமல் தடுக்கும் விதமாய் தேனீ- பட்டாம்பூச்சி வகைகளும் அழியத்தொடங்கிவிட்டன..  இன்னும் பத்து இருபதாண்டுகளில் என்ன ஆகும்??
காற்றில் மகரந்த சேர்க்கை நடத்தும் தாவரங்களை தவிர மற்ற தாவரங்களுக்கு மகரந்த சேர்க்கையே நடக்காமல் போகும்..  அதன் காரணமாய் அந்த தாவர இனங்கள் அழியும்.. ஒன்றை அடுத்து ஒன்றாக வாரிசு இல்லாத தாவர தலை முறைகள் முற்றிலும் காணாமல் போகும்.. தாவரம் இல்லாமல் மழை இல்லை.. மழை இல்லாமல் மனிதன் இல்லை..
மாயன் காலண்டர் நிஜமாக அணு உலைதான் வேண்டுமென்பதில்லை... உங்கள் கையில்.. என் கையில் இருக்கும் "நாம் செய்த வினை கோலிக்குண்டு" செல்ஃபோன் போதும்..!!!

எது தேவைன்னு மட்டும் நமக்கு தெரியல...

என்னுடைய சித்தப்பாவுக்கு..கிரிக்கெட் பற்றி  தெரிந்திருக்கவில்லை.. பிரதீபா பாட்டில் பரிசுப்பொருட்களை வீட்டிற்கு அள்ளி சென்றது பற்றியோ , ராபர்ட் வதேரா முன்னூறு கோடிக்கு மேல் சொத்து வாங்கியது பற்றியோ  தெரிந்திருக்கவில்லை.. ராஜூ முருகன் வட்டியும் முதலும் எழுதுவது பற்றி தெரிந்திருக்கவில்லை.. செந்தில் கே நடேசன் கவிதை என்ற பெயரில் தெரியாத்தனமாக அவனுடைய முகநூல் சுவருக்கு வருபவர்களை வதைப்பது பற்றியும் தெரிந்திருக்கவில்லை.. இணையம் பற்றி தெரியவில்லை..

ஆனால் அவருக்கு எப்போது நாற்று விட வேண்டுமென்பதும், வானத்தில் எந்த பக்கம் மின்னலடித்தால்  மழை பெய்யுமென்பதும். நாற்றங்காலில் எப்போது தண்ணீரை வடித்து காயவிட வேண்டுமென்பதும் தெரிந்திருந்தது.. யூரியாவை அதிகம் போட்டால் இலை சுருட்டு புழு உடனே பயிரை தாக்குமென்பது தெரிந்திருந்தது.. அவர்  கவலை அவரின், அவரை சார்ந்தவர்களின் பசியை தீர்ப்பதற்காகவும் , தேவைகளை தீர்ப்பதை பற்றியும் மட்டுமே இருக்கிறது..

ஆனால் நாம் ..????
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தீராத ஆரவத்தில் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம் .. ஆனால் எதிலும் பூரணமாக முடியவில்லை... நமக்கு சோறுபோடும் வேலையை தவிர அனைத்தை பற்றியும் அதிகமாய் கவலை படுகிறோம்..

தி. ஜானகிராமனை படிப்பவர்கள் ராஜேஷ்குமாரை படிப்பவர்களை மட்டமாகவே பார்கிறார்கள்..  கிரிக்கெட் பற்றி தெரியவில்லை என்றால் வேற்று கிரக மனிதனைப்போலவே நினைக்கிறார்கள்..  நேற்றைய அனுபவமும் இல்லை.. நாளைய திட்டமிடலும் இல்லை.. வெறுமனே..இன்றைய சிந்தனை.. ஆனாலும் இவைகளில் எதோ ஒரு திருப்தி.. ஆனால் அது தனிமனித திருப்தி... இதற்காக மற்றவர் ரசனையை ஏன் குறை சொல்ல வேண்டும்... அவங்க அவங்களுக்கு பிடிச்சத அவங்க அவங்க ரசிக்கிறாங்க.. இது முற்றிலும் தனி மனித திருப்திதானே தவிர தி. ஜானகிராமனை நீங்கள் படிப்பதாலேயோ- ராஜேஷ்குமாரை இன்னொருவர் படிப்பதாலேயோ ஒரு துரும்பு கூட பயனில்லை.. படிப்பவரை தவிர்த்து மற்றவர்களுக்கு...!!!

அவன் தேவன் என்றாலும் பாவத்தின் சம்பளம் மரணம்

திரேதா யுகத்தில் நடந்த இராமாயணத்தில் மனிதனாய் இருந்த அவதார புருஷன் ஸ்ரீ ராம பிரான் தனுடைய நண்பனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஆராயாமல் மாவீரம் வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்று விடுகிறான்.. ஆனால் ஒரு அவதாரம் செய்தாலும் தவறுதானே.. அது சரி செய்யப்பட்டதா...?? 
ஒரு சாதாரண மனிதனாய் எனக்குள்ளும் இந்த கேள்வி... வாலிக்கு மோட்ஷம் கொடுக்கத்தான் ஸ்ரீ ராமபிரானின் பானம் வாலியை வதம் செய்தது.. ஆனாலும் அது மானுட அ
வதாரத்தில் செய்ததாகையால் அதனை சரி செய்கிறார் பகவான்.. எப்படி..??
கதைக்குள் போவோமா...
துவாபர யுகம் .. அதாவது மகா பாரத காலம்.....ஒரு முனிவர் தவமிருக்கையில் அவரை பரிகாசம் செய்யும் பொருட்டு ஒரு ஆண்மகனுக்கு வயிற்றில் கந்தல்துணி மூட்டையை வைத்து கட்டி .. ஸ்திரீ வேடமிட்டு.. "இந்த பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்.." என்று வினவுகிறார்கள் ஆயர் பாடியின் சில இளைஞர்கள்.
ஆணுக்கு வேடமிட்டுதான் அப்படி நம்மை பரிகாசம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்த முனிவர் சினம் கொண்டார்.. இந்த பெண்ணுக்கு உலக்கை தான் பிறக்கும்..அந்த உலக்கைதான் உங்கள் இனம் அழிந்து போக காரணமாகும் என்று சபித்துவிட்டு போய் விட்டார்..
அந்த இளைஞனுக்கு பிரசவ வலி கண்டு ஒரு உலக்கையும் பிறந்தது.. பயந்து போனார்கள்.. முனிவரின் சாபம் பாதி பலித்துவிட்டது.. மீதியும் பலிக்குமானால் நம் இனம் கூண்டோடு அழிந்து விடும் என பயந்தனர்.. அந்த உலக்கையை மாவாக உரைத்தனர்.. அதனை யமுனை நதியில் கரைத்தனர்.. ஒரு நீளமான குச்சி அளவு அந்த உலக்கை தேய்ந்த உடன் அதனையும் நதியில் வீசிவிட்டனர்.
அவ்வாறாக கரைக்கப்பட்ட அந்த உலக்கைதூளில் இருந்து தர்ப்பை புற்கள் முளைத்து வளர்ந்தன..அந்த குச்சி கரை ஒதுங்கி கிடந்தது.. யமுனையின் கரையில் அவ்வழியே ஒரு வேடன் வந்தான்.. கரை ஒதுங்கி இருந்த அந்த உலக்கையின் தேய்ந்த குச்சி ஒரு அம்பு போல் இருந்தது.. அதனை எடுத்து தன்னுடைய அம்பராவில் வைத்துக்கொண்டான்..
மகாபாரத யுத்தம் முடிந்த பின் அந்த வெற்றியை கொண்டாட துவாரகாபுரியில் கூடி மது அருந்திய யாதவர்கள் போதையின் மிகுதியில் அங்கு முளைத்திருந்த தர்ப்பை புற்களை பிடுங்கி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மாண்டனர்.. அந்த முனிவரின் சாபம் வேலை செய்ய துவங்கியது..
ஒரு புல் வெளியில் வான் பார்த்து படுத்திருந்தார் பகவான் கிருஷ்ணர்.. ஒரு காலை மடக்கி வைத்து இன்னொரு காலை மடக்கி வைத்த காலின் மேல் தூக்கி வைத்து ஆட்டிக்கொண்டிருந்தார்.. அதாவது தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புல் தரையில் படுத்திருக்கும் ஆள் தெரியாது.. மேலிருக்கும் காலின் கட்டை விரல் மட்டும் தெரியும்.. அப்போது அந்த வழியாக வேடன் வந்தான்.. நாம் முன்பே கண்ட உலக்கை அம்பை எடுத்த அதே வேடன்.. அவன் தூரத்திலிருந்து பார்த்தபோது பகவான் கிருஷ்ணரின் கால் கட்டை விரல் அசைவு மட்டும் தெரிய அதனை ஒரு மான் மேய்ந்துகிண்டிருப்பதாக நினைத்த வேடன் தன்னுடைய அம்பரா துணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து குறி பார்த்து அந்த கட்டை விரலின் மீது பாய்ச்சினான்..
அவன் எடுத்த அந்த அம்பு.. ஆம்.. 
 உலக்கையில் மிஞ்சிய கடைசி பகுதி..

அந்த வேடன்.. வாலி என்பதனை சொல்லவும் வேண்டுமோ...??!!!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!!

திருவள்ளுவர் என்ற கற்பனைக்கு உருவம் கொடுத்தவர் - திரு.வேணுகோபால் ஷர்மா


உலகின் நிறைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரின் சட்டை காலரையும் ஒவ்வோர் அங்குலம் உயர்த்திய திருக்குறளை எழுதியது திரு வள்ளுவர் என்று படித்திருக்கிறோம்.. ஆனால் இதனை எழுதியவர் வள்ளுவர்தான் என்பதோ.. அவரது உருவம் இப்படித் தான் இருக்கும் என்பதோ தெரியாது.. பெயர், உருவம் எல்லாமே கற்பனையாய் உருவாக்கப்பட்டவைதான்..
மேலும் இவர் எழுதியதில் நமக்கு கிடைத்தது வெறும் 1330 பாடல்கள் தான்.. இன்னும் அதிகமாக எழுதி இருக்க கூடும்..


சரி.. இந்த திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தது யார்.. எப்போது.. என்ற தகவல்கள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அவர்...திரு அறிஞர் அண்ணா அவர்களால் "ஓவிய பெருந்தகை" என்று பாராட்டப்பட்ட கே ஆர் வேணுகோபால ஷர்மா.. 1950 ம ஆண்டு இதற்கான வேலைகளை துவங்கி முதலில் பென்சில் ஓவியமாக வரைந்தார்.. பிறகு அதற்கான வண்ணங்களை சேர்த்தார்.. 1953 ம ஆண்டில் இவரை சந்தித்த திரு பாரதி தாசன் அவர்கள் இவரை ஊக்குவித்து விரைவில் அந்த ஓவியத்தை வரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்..
ஒருவழியாக 1957 ம ஆண்டில் வரைந்து முடித்த அந்த ஓவியத்தை அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்களையும் , திரு அறிஞர் அண்ணா அவர்களையும் அழைத்து காண்பித்தார்.. அதனை பார்த்து வியந்த திரு அறிஞர் அண்ணா அவர்கள் அந்த படத்தை அங்கீகரிக்க திரு பக்தவத்சலம் அவர்களுக்கு பரிந்துரைத்தார். அதனை ஏற்ற முதல்வர் அவர்கள் அந்த படத்தை தபால் தலையாக வெளியிட்டு தமிழுக்கும், வள்ளுவருக்கும், அதனை வரைந்த கே ஆர் வேணுகோபால் ஷர்மா அவர்களையும் கௌரவிக்க பரிந்துரைத்தார்..
அவரது பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அஞ்சல் துறை 1960 ம ஆண்டு திருவள்ளுவர் படத்துடன் கூடிய தபால் தலையை வெளியிட்டது..


கூடுதல் தகவல் - எதிர்காலத்தை கணித்து சொல்லக்கூடியவர்களை நமது வழக்கத்தில் வள்ளுவர்கள் என்று அழைப்பதால் இவருக்கு வள்ளுவர் என்ற பெயரும்.. மரியாதை நிமித்தம் திரு என்றும் சேர்த்து பெயரிடப்பட்டது..

கூடுதல் தகவல் - கன்னியாகுமரியில் நிறுவப்பட்டிருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவர் திரு. கணபதி ஸ்தபதி.. அதற்கு மாடலாக நின்றவர்  பிரபல பரதநாட்டிய கலைஞர் திருமதி.பத்மா சுப்பிரமணியம் 

( இதில் ஏதேனும் தவறு இருப்பின் தெரிந்தவர் சுட்டிக்காட்டவும் - நன்றி )

காவிரி நாடகம்

கடைமடை விவசாயிகளே.. திரண்டு வாருங்கள் என்று பச்சை துண்டு அடையாளத்துடன் விவசாய அரசியல் வாதிகளும்... 
ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என கன்னட தட்ஷின வேதிகே.. தெலுங்கு தட்சின அம்பிகே என்றெல்லாம் முளைக்கும் காளான்களும் இருபது பேர் நாற்பது பேர் கொண்ட மாபெரும் ஊர்வலம் நடத்தியும்..
வழக்கம் போல் "பிளீஸ் தண்ணிய தொறந்து விட சொல்லுங்க..." என்று தமிழக அரசும்... " சாரி.. எங்களுக்கே பத்தல .. தொறக்க கூடாதுன்னு சொல்லுங்க.." என்று கர்னாடக அரசும் மாற்றி மாற்றி உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தும்..
மத்திய குழு வறட்சியை பார்வையிட வருகிறது என்று ஊரை கூட்டி நாடகம் நடத்தியும்..

இந்த செஷனுக்கான காவிரி நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது...

மழை பெய்ய தொடங்கிவிட்டது.. "பலநாள் மூதேவியை தாங்கி விடலாம்.. ஒரு நாள் சீதேவியை தாங்க முடியாது.." என்ற கிராம சொல்வழக்கு மாதிரி.." இந்த சனியம்புடிச்ச மானம் என்னத்துக்கு இப்படி கொட்டுதுன்னு தெரியலையே..." என்ற புலம்பலுடன் விவசாய பெருங்குடி மக்கள்..

"எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது.. இந்த மழையின் காரணமாக.. அரசு ஏதாவது செய்யணும்.." என்று மழையை நிறுத்த வருணபகவானுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று தனியார் தொலைகாட்சிகளில் அரசை குறை சொல்லும் நகர மாந்தர்கள்..
இப்படியாக மழைக்காலமும் முடிவுக்கு வந்துவிடும்..

மறுபடியும் அடுத்த கோடைக்கு தூசு தட்டப்படும் காவிரி நாடகம்..

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 % கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருக்கிறது.. அந்த மழை தண்ணீரை சேகரித்து வைக்க அரசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறது..? ஏற்கெனவே காணாமல் போயிருக்கின்றன ஏரி குளங்கள் எல்லாம்.. குட்டி குட்டியாய் ஏரி இருந்ததென அடையாளம் சொல்லும் கொஞ்ச நஞ்ச பரப்புகளோ புதர்கள் மண்டி கிடக்கிறது.. இந்த ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி , காணாமல் போன குளங்களை கண்டு பிடித்து செப்பனிட்டு வைத்திருந்தாலே நமது வறட்சிகால தேவைக்கு கர்நாடகாவை கெஞ்சும் அவசியம் பாதியாய் குறையும்..
எந்த அரசும் இதை செய்யாது.. ஏனென்றால் அடுத்த காவிரி சீசன் அரசியல் எப்படி செய்வதாம்..??
வழக்கம் போல புலம்பலுடன் குவாட்டருக்கும் குண்டானுக்கும் ஒட்டு போடும் புத்திசாலி மக்களை பெற்றவர்கள் அல்லவா அவர்கள்..??

வழி விடுங்கப்பா..

பத்து பேர் சாப்பிடும் உணவு ஒரு பாத்திரத்தில் இருக்கிறது... பத்து ஆட்களும் இருக்கிறார்கள்.. முதலில் நிற்பவர் வயிறு முட்ட சாப்பிட்ட பின்பு "ஊரில் இருந்து என்னுடைய அண்ணன் வருவதாக சொல்லி இருக்கிறார்.. அவருக்கும் எடுத்துக்கொள்கிறேன்.." என்று ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்கிறார்.. இரண்டாமவரும் அதே போல் செய்கிறார்.. மூன்றாமவரும்  அப்படியே தொடர.. ஆறு பேரின் சாப்பாடு மூன்று பேரிடம் சென்று  விடுகிறது.. இதனை பார்க்கும் ஆறாவது ஏழாவது ....... பத்தாவது ஆட்கள் என்ன செய்வார்கள்..??
ஒன்று.. வரிசை முறையை மீறி முன்னே வர வன்முறையை கையிலெடுப்பார்... இல்லை ஊரில் இருபவருக்காக முன்னவர்கள் எடுத்து வைத்த பார்சலை களவாட முனைவார்..  ஒருவரிருவர் தலை எழுத்து என பட்டினியை சகித்துக்கொள்வார்..

ஒருவனை களவாடவும், வன்முறையை கையிலெடுக்கவும் தூண்டுவது யார்..? அல்லது எது...??
முன்னாள் வாய்ப்பு கிடைக்க பெற்றவர் தானே.. அப்போது குற்றவாளி முன்னால் இருப்பவர் தானே..?

தன்னுடைய தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வழி விடும் போது இந்த உலகத்தில் இருக்கும் அறுநூறு கோடி மக்களுக்கும் தேவையான எல்லாமே இருக்கிறது... வாய்ப்பு கிடைத்தவர்கள் பதினேழு தலை முறைக்கும் சேர்த்து சம்பாதிக்க துடிக்கும் போது மட்டுமே சட்ட விரோத காரியங்கள் செய்ய தூண்டப்படுகிறார்கள் வாய்ப்பு கிடைக்காதவர்கள்..

இதுல இருந்து என்ன சொல்ல வரீங்க...??

உங்க ஆபீஸ்ல பதினஞ்சு இருபது வருஷமா சீட்ட தேச்சுகிட்டு ஒரு குரூப் உட்கார்ந்திருக்கும்ல.. பின்னாடி வந்தவங்களுக்கு வழி விடாம... போட்டு தள்ளுங்க சொல்றேன்.. ஹா ஹா ஹா..

சினிமா விமர்சனம் எழுதும் என்னுடைய அன்பான நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

பணம் எத்தனை கோடிகள் புழங்குகிறதோ அத்தனை கோடி சென்டிமென்ட்களும் புழங்கும் ஒரு மாபெரும் கனவுத்தொழிற்சாலைதான்  சினிமா என்பது. வருடத்திற்கு சுமார் முன்னூறு படங்களுக்கு பூஜை போடப்படுகிறதென்று வைத்துக்கொண்டோமானால் அதில் சுமார் இருநூறு படங்களே படப்பிடிப்பு வரை செல்கின்றன  .. அந்த இருநூறில் கால்- அரை- முக்கால் வீதம் படப்பிடிப்பு முடிந்து பல்வேறு காரணங்களுக்காய்  முடங்கிப்போபவை சுமார் நூறு படங்கள்.. 
படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வெளியட முடியாமல் முடங்குபவை சுமார் இருபத்தைந்து முதல் முப்பது படங்கள்..

ஆக முன்னூறு படங்கள் தொடங்கியதில் சுமார் எழுபது அல்லது அதற்கும் குறைவான படங்களே நமது பார்வைக்கு வருகிறது..
இந்த படங்களில் சம்பளம், கால்ஷீட் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க புதுமுக நடிகர்கள்.. நடிகைகள்.. தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களை வைத்து தொடங்கப்படும் படங்கள் தான் முடங்கிப்போவதில் முதலிடம்..
சுமார் பத்து முதல் இருபது ஆண்டு காலம் கூட போராடி ஒருவர் அவரின்  கனவுகளை திரட்டி வெள்ளித்திரையில் கொண்டு வர அவர் படும் பாடு சொல்லி மாளாது.. எந்த காரணத்தால் ஒரு புதுமுகம் (அவர் திரைக்கு முன்னாலோ- பின்னிருந்தோ இயங்குபவராக இருக்கலாம்) அறிமுகமாக கூடிய திரைப்படம் வெளிவர முடியாமல் போனாலோ அல்லது வெளிவந்து தோல்வியை தழுவினாலோ முதலில் "ராசி இல்லாதவன்/ள்" என்று முத்திரை குத்தப்படுபவர்கள் இந்த புது முகங்களே...
இன்றைய தினம்  காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து செய்திகளை சேகரிக்கும் அளவு சமூக வலைத்தளங்கள் மாபெரும் வளர்ச்சியடைந்திருக்கின்றன.. அந்த வளர்ச்சி பெற்ற வலைத்தளத்தில் பங்கெடுத்து நம்முடைய கருத்துக்களையும் நண்பர்கள்- நண்பர்களின் நண்பர்கள் என பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாமும் பெற்றிருக்கிறோம்..
 திரைப்படத்திற்கு மதிப்பெண் போட்டு ரேங்க்    கொடுக்கும் ஊடகங்கள் எதோ ஒரு வருமானத்திற்காக இப்படி செய்கின்றன.. ஆனால் எந்த லாபமுமின்றி நம் மனதில் பட்டதை எல்லாம் இதில் பதிவு செய்கிறோம்..
அப்படி பதிவு செய்யும் விஷயங்களில் சினிமா விமர்சனமும் ஒன்று. 
பல்லாயிரக்கணக்கானோரின் உழைப்பில் சில பல புது முகங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கோடிகள் கொட்டி எடுக்கப்படும் ஒரு படத்தை அது வெளி வந்த அன்றே பார்க்கும் நண்பர்கள் ( இதில் ஓசியில் ஆன் லைனில் பார்ப்பவர்களே அதிகம் ) படம்.. "மொக்கை" "குப்பை " என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக பதிவிடுகிறார்கள்..
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி எப்படி பல்கி பெருகி சமூக தாக்கங்களை ஏற்படுத்துமென்பதை கண்கூடாக காண்பவர்கள் நாம்..
இதில் நம்முடைய ரசனையை வெளிப்படுத்தும் நோக்கமோ- நானெல்லாம் "உலக சினிமாவை அலசி ஆராய்ஞ்சவனாக்கும்  " என்று சொல்லிக்கொள்ளும் அதி மேதாவித்தனமும் தான் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை..
நம்முடைய இந்த அதிமேதாவித்தனம் எத்தனை பேருடைய எதிர்காலத்தில் நெருப்பு வைக்கும் தெரியுமா..??
என் அன்பு நண்பர்களே.. நீங்கள் திரைப்படம் பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருக்குமெனில் அதனை பார்க்க பரிந்துரை செய்யுங்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதற்கென ஒரு ரசிக வட்டம் இருக்கும்.. அவர்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டு விடுங்கள்..
இன்னொருத்தன் சோத்துல மண்ணள்ளிப்போட்ற வேலைய நாம செய்யனுமா????

ஒரு பழைய நினைவில் வகிடெடுக்காத மனோ..



மனோ...


மனோன்மணி... ஃ பேஸ்புக்கில் ஒரு நண்பருக்கு நண்பராகவோ.. நண்பருக்கு நண்பருக்கு நண்பராகவோ இருந்திருக்கும் இந்த பெயர் சுமார் இருபத்து இரண்டு வருடங்கள் பின்னோக்கி நகர்த்தியது..

எனக்கு தெரிந்த ஒரே மனோன்மணி அவள் தான்.. அவளாக இருக்க கூடுமோ... ஏதோ ஒரு நம்பிக்கையில் "எண்பதுகளின் கடைசியில் நான் படித்த பள்ளியில் ஒரு மனோ இருந்தார்.. ஒரு வேலை நீங்கள் அவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.. அவராக இருக்கும் பட்சத்தில் தொடர்பு கொள்ளவும் " என்ற குறுஞ்செய்தியை தட்டிவிட்டு..

மறுபடியும் இருபத்து இரண்டு வருடம் பின்னோக்கி பயணித்தேன்..

உள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்காக இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த காசாங்காடு அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் அரைக்கால் சட்டையுடன் நுழைந்தது தான் தெரிந்தது.. வேறொன்றும் பெரிதாய் சொல்லிக்கொள்ளுமளவு இல்லாத சராசரி மாணவன் தான்.. ஆனாலும் பள்ளி நாட்கள் எல்லோருக்கும் உரிய அதே விளையாட்டுகள்.. அதே குறும்புகள்.. அதே சிணுங்கல்கள் எங்களுக்கும் உண்டு..

அந்த நாற்றங்காலில் இருந்து பறித்து உலகின் பல்வேறு பாகங்களில் நடவு செய்யப்பட்ட என் பள்ளி நண்பர்களில் உள்ளூரிலேயே செட்டிலாகிவிட்ட நண்பர்களை சந்தித்திருக்கிறேன்.. இரண்டு மூன்று பேர் பொறியாளராகி இருந்தார்கள்..ஒருவர் மருத்துவராகி இருந்தார்கள்.. ஒரு சிலர் விவசாயி.. ஓரிருவர் வியாபாரிகள்.. நிறைய பெண்கள் குடும்ப தலைவிகள்..

இந்த மனோவும் அதில் ஒருத்தி.. வெள்ளை சட்டையும் ஊதா பாவாடையும், வகிடெடுக்காமல் வழித்து சீவி பின்னலிட்ட நீளமான முடி.. இதைத்தவிர வேறொன்றும் பெரிதாய் ஞாபகமில்லை..

ஆனால் மனோ என்ற பெயரை பார்த்ததும் புற்றுக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் ஈசல் மாதிரி இவ்வளவுகாலமும் எங்கோ ஒளிந்திருந்த அந்த வகிடெடுக்காத வழித்து சீவி பின்னலிட்ட முடி நினைவு தான் முதலில் எட்டிப்பார்த்தது..

நண்பர்களின் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த போது குறுஞ்செய்தி பெட்டி அவதரித்தது.. எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. மனோவே தான்.. அதே மனோ...

"ஆமா.. காசங்காட்ல படிச்ச மனோ தான்.. "

"ஒ காட்... மனோ.. எப்படி இருக்க மனோ...?"

"நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?"

"நானும் நல்லா இருக்கேன் மனோ.... யு எஸ் ல இருக்கேன்னு பார்த்தேன் புரோபைல் ல... எப்படி இருக்க.. என்ன பண்ற.. வீட்டுக்காரர் எப்படி இருக்கார்.. என்ன பண்றார்.. ?"

குழந்தைகள் பற்றி மட்டும் கேட்கவில்லை.. முன்னொரு முறை குழந்தைகள் இல்லாத ஒரு நெடுநாள் சந்திக்காத நண்பரிடம் குழந்தைகள் பற்றி விசாரித்துவிட்டு அவர் பட்ட சங்கடத்தை பொறுக்காமல் தப்பா கேட்டுட்டோமோ என்று மனதுக்குள் குமைந்த அனுபவமிருப்பதால் இப்போதெல்லாம் புதிதாகவோ- அல்லது பல வருடங்களுக்கு பிறகோ சந்திக்கும் நபரிடம் குழந்தைகள் பற்றிய கேள்வியை அவர்களாக சொல்லாத வரை முன் வைப்பதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்..

"எல்லோரும் நல்லா இருக்கோம்.. நான் இங்க பி எச் டி பண்ணிட்டு ஒர்க் பண்ணிட்டிருக்கேன்.. அவர் பேர் தமிழ்.. நல்லா இருக்கார்..ரெண்டு பசங்க.. ஒரு பொண்ணு ஒரு பையன்.. பொண்ணு சுஜா.. பையன் ரோஹித் கிரிஷ்..போட்டோ போஸ்ட் பண்ணி இருக்கேன் பாருங்க.."

சுஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது எடுத்த புகைப்படங்களில் தமிழ் சிரித்தார்.. மனோ சிரித்தாள்.. சுஜா சிரித்தாள்.. ரோஹித்... இந்த பூமியை அப்போது முத்தமிட்டிருக்க மாட்டான் போலும்..

மனோ நிறைய மாறி இருந்தாள்.. அமெரிக்க வாசமோ.. சந்தோஷமான வாழ்க்கையோ கொஞ்சம் தடித்திருந்தாள்.. வகிடெடுத்து சீவி இருந்தாள்.. பின்னலிட்டிருக்கவில்லை.. ஆனாலும் மனோ தெரிந்தாள்..

" மனோ.. நீ வகிடெடுககாமதான சீவி இருப்ப...?/"

"ஒ.. கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க... நம்ம கூட படிச்சவங்கள யாரையாச்சும் பார்த்தீங்களா.. எப்படி இருக்காங்க.. ஒ.. சாரிப்பா.. உங்கள பத்தி நான் கேக்கவே இல்ல... மேரேஜ் ஆயிடிச்சா.. குழந்தைங்க..?"

"சில பேரை பார்த்தேன் மனோ... பார்த்த வரையில் எல்லோரும் நல்லா இருக்காங்க.. கல்யாணமாயிடிச்சு.. ஒரு பெண் குழந்தை.. எல்லோரும் நல்லா இருக்காங்க.." வரிசை மாறிவிடாமல் அவளின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்..

"இப்போ எங்க இருக்கீங்க.. ?"

"நான் தோஹா ல இருக்கேன்.. "

"ஊருக்கு எப்போ போவீங்க... நான் மார்ச்ல வரலாம்னு இருக்கேன்.. அப்போ வர முடியுமா... முடிஞ்சா நம்ம எல்லா ஃபிரண்ட்ஸ்ஸையும் பார்க்கணும்.. உங்களுக்கு என்ன வாங்கிட்டு வர.. சொல்லுங்க... "

"கண்டிப்பா நானும் அப்போ ஊருக்கு வர ட்ரை பண்றேன்.. கூடுமான வரை ஊர்ல இருக்கவங்கள சந்திக்கலாம்.. எனக்கு எதுவும் வேணாம்.. இருபத்து ரெண்டு வருஷத்துக்கப்புறம் உன்னை கண்டு பிடிச்சதே பெரிய விஷயம்பா...எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..."

"எனக்கும் தான்... நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல.. "

"ஓகே மனோ... தொடர்புல இரு.. ஊருக்கு போன் பண்ணா எல்லோரையும் கேட்டதா சொல்லு..."

நிறைய பேர் வந்து ஹாய் சொன்னாலும்.. பல உரையாடல்கள் செயற்கையாய்த்தானிருக்கும்.. ஆனால் மனோவுடன் பேசியதென்னவோ அந்த கால்சட்டை நாட்களுக்கே கடத்தி சென்றது..

ஆனாலும் அந்த "ங்க" மட்டும் உறுத்தவே செய்தது... வயதாகி விட்டதோ....??

குழந்தை தொழிலாளர்கள் இவர்கள் மட்டும் தானா..??

டீக்கடைகளிலும் மது விநியோக கூடங்களிலும் தொழில் கற்றுக்கொள்ளவோ- பொழுது போக்காகவோ சிறுவர்கள் வேலைக்கு வரவில்லை.. அவர்களின் குடும்பத்தின் இன்றைய நிலைக்கு உதவும் பொருட்டுதான் வருகிறார்கள்..
பணக்காரர்கள் சாப்பாட்டு தட்டையும் , இது போன்ற ஏழை சிறார்களின் சாப்பாட்டு தட்டையும் போட்டோ ஷாப்பில் ஒப்பீடு செய்து இந்தியா வல்லரசாகுமா என்று கேட்கும் இணைய புரட்சியாளர்கள் சொல்லும் புரட்சி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இதெல்லாம் குளிரூட்டப்பட்ட அறையில் கணினியின் விசைப்பலகையில் மட்டுமே சாத்தியம்..

அந்த சிறுவர்களை பிடித்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிடுவதுடன் புரட்சி முடிவுக்கு வந்து விடுமா?? இந்த சிறுவனின் தினசரி பத்துரூபாய் வருமான இழப்பில் அந்த குடும்பம்??/

வீட்டின் வயிறு பசிக்காக டீக்கடையிலும் , மது விநியோக கூடங்களிலும் பணி செய்யும் சிறார்கள் மட்டும் தான் இவர்கள் கண்ணுக்கு தெரிந்த குழந்தை தொழிலாளிகள்... ஏனென்றால் இவர்களை பிடித்து சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்துவிட்டால் இவர்களின் பெற்றோர்கள் பயந்து விடுவார்கள்.. ஆனால் சூப்பர் சிங்கரில் அறுபது லட்சமோ, விளம்பரங்களில் ஆயிரக்கணக்கிலோ சம்பாதிக்கும் குழந்தைகள் எல்லாம் குழந்தை தொழிலாளர்கள் வரிசையிலேயே வர மாட்டார்கள்.. ஏனென்றால் அங்கே புரட்சி பண்ண சென்றால்.. "மூடிட்டு போய்யா எனக்கு தெரியும் " என்று துரத்திவிடும் அளவிற்கு அந்த பணக்கார பெற்றோர்கள் வசதியானவர்கள்.. அல்லது பலம் படைத்தவர்கள்..

ஒரு எல் சி டி டி வி யும் சில ரிமோட்டுகளும்...

MGR இறந்த அன்று டிசம்பர் 24 , 1987 ல் தான் முதன் முதலாய் ஒரு தொலைகாட்சி ஒளிபரப்பை பகலில் பார்க்க நேர்ந்தது.. அதற்கு முன்பு ஊரில் ஏதேனும் விசேஷமென்றால் மதுக்கூரில் இருந்து வாடகைக்கு எடுத்து வரப்படும் டி வி யும் டெக்கும் இரவில் தூரமாய் மட்டுமே தரிசனம் தரும்.. மின் இணைப்பை கொடுத்து கருப்பு வெள்ளையாய் வண்டுகள் நெருக்கமாய் மொய்க்கும் ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் கேட்ட உடனேயே தேனாறு பாய்ந்ததுபோல் இருக்கும்.. என்னையும் அறியாமல் ஊஊஊய்ய்ய்ய் என்று எழுப்பும் சத்தம் என் பிராய சிறுவர்களின் கோரஸ் க்கு தொடக்கமாயிருக்கும்..

பின்னாளில் எங்களால் மாவட்டம் என்று அழைக்கப்படும் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் சவூதியிலிருந்து கஸ்டம்ஸ் டூட்டி கட்டி கப்பலில் கொண்டு வந்த தங்க நிற சோனி டி வி அவரின் குடும்ப தேவைக்கு பணமாய் மாற்ற விற்பனைக்கு சென்ற பிறகு டி வி பற்றி கனவே மிச்சமிருந்தது..

ஒரு "எல்" வளைவான சாலையின் வெளி கோணத்தில் அமைந்த சக்திவேல் வாத்தியார், அவரின் தங்கை வீட்டிலிருந்து கொண்டு வந்து வைத்திருந்த இன்னொரு டி வி.. வாத்தியாரான அவருக்கு இயக்கத்தெரியாத விஷயமாயிருந்தது.. பரிமளா சித்தி மட்டுமே அதை இயக்க தெரிந்த எங்களூர் வில்லேஜ் விஞ்ஞானி..
ஊரில் இருக்கும் நண்டு சிண்டெல்லாம் அவர்கள் வீட்டில் குழும அவர்களின் இரவு சாப்பாட்டு நேரத்தை அவர்கள் ஒரு மணி நேரம் முன்னே நகர்த்துமளவுக்கு போனது.. எங்கள் தொல்லை தாங்காமல் பரிமளா சித்தியை வீட்டில் மறைத்து வைத்து விட்டு "அக்கா இல்லப்பா... நாளைக்கு வாங்க..." என்று பொதுவாக சொல்லி விட்டு அவர்கள் வீட்டில் விளக்கை எல்லாம் எட்டுமணிக்கே அணைக்குமளவு போனது எங்கள் வன்முறை..


அவர்கள் வீட்டின் எதிர்புறம் ஐம்பது மீட்டர்களுக்கு அப்பால் ஒளிந்திருந்து இருட்டிய வீட்டின் மூடிய கதவுகளுக்கப்பாலும் பார்வையை செலுத்தி காத்திருப்போம்.., பசங்க எல்லோரும் போயிட்டாங்க என்று உறுதி படுத்திக்கொண்டு அவர்கள் டி வி யை ஆன் செய்த உடன் ஓடிப்போய் டி வி யின் முன் அமர.. தொல்லை தாங்காமல் வாத்தியார் தங்கை வீட்டிற்கே அந்த டி வி யை திருப்பி கொடுத்தனுப்பியது தனிக்கதை..
வாத்தியார் வீடு எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரமிருந்தது..

அப்போதெல்லாம் ஆண்டவனிடம் என்னுடைய ஒரே வேண்டுதல்.. எங்க வீட்டுக்கு பக்கத்துல யாராவது டி வி வாங்க மாட்டாங்களா..??

கடவுளுக்கு நிச்சயம் அது காதில் விழுந்திருக்க வேண்டும்... ஆம்.. எங்களின் பக்கத்து வீட்டு மணி அண்ணன் ஒரு ஒனிடா டி வியை வாங்கி வந்தார்... அடடா.. இந்த இடைப்பட்ட காலத்தில் டி வி யை இயக்க தெரிந்த வில்லேஜ் விஞ்ஞானிகளில் நானும் ஒரு ஆளானேன்... மணி அண்ணனோ- கோவிந்த ராஜ் அத்தானோ இல்லாத நேரத்தில் அந்த டி வி யை இயக்கும் பெரிய வாய்ப்பு எனக்கு கிட்டும்..

அகன்ற திரை சோனி பிரேவியா எல் சி டி டி வி, சாம்சங் சி டி பிளேயர்.., சன் டைரெக்ட் , ஹோம் தியேட்டர் சிஸ்டம் எல்லாவற்றிற்குமான ரிமோட்டுடன் ஒரு கார்ட்லெஸ் ரிசீவர், மொபைல் போன் எல்லாவற்றையும் கடை பரப்பிக்கொண்டு கொறிக்க ஏதாவது வைத்துக்கொண்டு வீட்டில் நீட்டி படுத்திருக்கிறேன்...

சக்திவேல் வாத்தியார் வீட்டின் எதிரில் ஐம்பது மீட்டருக்கப்பால் டி வி வெளிச்சத்திற்காக காத்திருந்த சந்தோஷத்தை தொலைத்துவிட்டு....