வியாழன், 20 செப்டம்பர், 2018

கவனம் தேவை கதாசிரியர்களே -- மெர்சல்

தமிழ் சினிமாவின் கதைக்களம் என்று எடுத்துக்கொண்டால்... ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் புராண- இதிகாச கதைகளாகவும், கதை மாந்தர்களாகவுமே இருந்தார்கள்... பிறகு அது கொஞ்சம் மாற்றமடைந்து வரலாற்று கதாபாத்திரங்கள், மன்னர்கள் பக்கம் திரும்பியது...... இடையிடையே சுதந்திர போராட்டம் போன்றவற்றின் கதாநாயகர்களும் திரையில் மின்னி மறைந்தார்கள்...



புராண-இதிகாச கதாப்பாத்திரங்களில் சம்பவங்கள் எல்லாம் புராணங்கள்-இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் வசனங்கள், காட்சி அமைப்புகள், கதை மாந்தர்கள் , இடங்கள் எல்லாம் கதாசிரியர்-இயக்குனர்களின் விருப்பப்படியும், கற்பனை திறனுக்கேற்பவும்தான் இருந்தன....

இது வரலாற்று புருஷர்களை குறிக்கும் விதமாக மாறியபொழுது அவைகளை பற்றிய/ அவர்களை பற்றிய பற்பல தேடல்கள் மூலம் முழுக்க முழுக்க உண்மையில்லை என்றாலும் ஆதரங்களுடனே தான் அந்த பாத்திரங்கள் உருவாக்கப்பட்டது... இவைகளில் ஏதேனும் தவறான தகவல்கள் இருபினும் அவைகளை பற்றிய தெளிந்த அறிவு உரிய சிலரால் மட்டுமே அந்த குறைகள் கண்டறியப்பட்டது... ஆனாலும் அதற்கு பெரிய எதிர்வினைகள் எதுவும் ஏற்பட வில்லை...

அதன் பிறகு தனிமனித வாழ்வியல், ஜாதீய வாழ்வியல், பூகோள வாழ்வியல் முறைகள் கதைக்களங்களாக உருவெடுத்தது... இதில் சில எதிர்ப்புகள் வந்தாலும் தனிமனித அனுபவம் சார்ந்த, சமகால கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த பார்முலா வெற்றி பெற்றது...

ஸ்ரீதரின் கதைக்களமான மேல்தட்டு வர்க்க வாழ்வியல், விசு இயக்கிய குடும்ப கதைகள், கமல் நடித்த பதினாறு வயதினிலே , ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எல்லாம் சமகால மனிதர்கள்.... அவர்களை போல் எல்லோரும் இல்லாவிட்டாலும் எங்கோ வாழும் நிஜ பாத்திரங்கள்....

மேலே குறிப்பிட்ட எல்லாம்.. நம் முன்னோர்களின் கற்பனைகள், நாம் பார்த்தறியாத பாத்திரங்கள்.... இவர்களை பற்றிய புனைவுகள் ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது....

சமகாலத்தில், ஆளும் ஆசையுடன் இருக்கும் சிலர் தங்களின் ஆளுமையை காட்டுவதாக நினைத்து அதற்கேற்ப கதைக்களங்களை தேடுகிறார்கள்... இதனை உணரும் கதாசிரியர்கள்/இயக்குனர்கள் இவர்களின் கால்சீட் வாங்குவதற்காக இவர்களை தேவலோக புருஷர்களையும், ஆளப்பிறந்தவர்களாயும் உருவகப்படுத்தி கதை சொல்ல நினைக்கிறார்கள்.. இதற்காக இவர்கள் சமகால பொது விஷயங்களை சேர்த்துக்கொள்கிறார்கள்...

பெருகிவிட்ட ஊடக தொடர்புகள், தெளிவான /தெளிவில்லாத அரசியல் அறிவு, தான் நினைத்ததை, அறிந்ததை உடனடியாக உலகத்தோரிடம் பகிர்ந்துகொள்ளும் வசதி என எல்லாம் பெற்ற சமகால சந்ததிகள், இப்படியான சமகால நடப்புகளை வைத்து சொல்லப்படும் கதைகளின் உண்மை தன்மையை உடனடியாய் அறிந்துகொள்வதால் வெகுவான விமர்சன கணைகளை தொடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...

தலைவனாக வேண்டும் என்ற விஜயின் ஆசை... விஜய் அவர்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற அட்லியின் ஆசை, இந்த இருவர் கூட்டணியை பயன்படுத்தி சம்பாதித்துவிட வேண்டும் என்ற தயாரிப்பாளரின் ஆசை.... இந்த மூன்று ஆசைகளும் கைகோர்த்து சமகால விஷயங்களை கலந்து சமைக்க முற்படும்பொழுது கூடுதல் கவனமாக இருந்திருக்க வேண்டும்....

புராண-இதிகாச-வரலாற்று தகவல்களை வைத்து படமெடுத்தவர்கள் எல்லாமே நிறைய தேடல்களுடன், பல்வேறு ஆய்வுகளுடன் படமெடுத்தார்கள்.... ஆனால் இந்த கூட்டணியோ.... வாட்ஸ் ஆப் வசனங்கள், டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கிடைத்த தகவல்களை வைத்து அதை உண்மையாக நினைத்தபொழுது....

செம்ம அடி வாங்கி இருக்கிறார்கள்....

இனிமேலாவது மிக சரியான தகவல்களுடன், தேவைப்பட்டால் நிரூபிக்கும் ஆதாரங்களுடன் சமகால நடப்புகளை பற்றிய கதைக்களங்களை உருவாக்க வேண்டும்... இல்லை என்றால்... பேய்-ஆவி கதைகள், நாட்டாமை பொண்ண வேலைகாரன் லவ் பண்ற கதைகள் போன்ற சமூக சீர்திருத்த படங்களோடு நின்றுவிடுதல் நலம்...

இப்போது எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள்... அவர்கள் மிகுந்த புரிதல்களுடன் விபரமாய் வேறு இருக்கிறார்கள்... ஜாக்கிரதை...

இது சாமான்யனின் எச்சரிக்கை...!!..

டெங்கு பீதி

சில நேரங்களில் சில விஷயங்களை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டியது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை.... சமீபத்திய விஷயம் "டெங்கு மரணங்கள்" 



சமீபத்திய ஊடக செய்திகள் எங்கெங்கு டெங்கு மரணம் நிகழ்ந்தாலும் தேடிப்பிடித்து படமாக்கி ஒளிபரப்பி ஜனநாயக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றன... நிஜமாகவே நிலைமை சற்று சீரியஸ்தான்... வந்த டெங்குவை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும், இனிமேல் வராமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும்... பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி அந்த முயற்சி வெற்றி பெறாது....

நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்கிறது.... என்று நிச்சயம் எந்த ஒரு அரசும் ஒப்புக்கொள்ளாது... இதற்கு இரண்டு காரணங்கள் .... ஒன்று அரசின் கையாலாகாத தனத்தை அவர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... அதே நேரம்... அரசு "ஆமாம்.... நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது... கட்டுப்படுத்த முடியாத அளவு பரவிக்கொண்டிருகிறது..." என்று சொன்னால்..... நிலைமை என்னாகும்?? மக்கள் பீதிக்குள்ளாவார்கள்.... அதை சமூக விரோதிகள் வதந்திகளை கிளப்பி மேலும் பயப்படுத்துவார்கள்.... சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்.... அதை தொடர்ந்த தனியார்/அரசு பொருளிழப்புகள் ஏற்படும்.... இன்னும் பற்பல இன்னல்கள் உருவாகும்... ஆகவே அரசு ஒப்புக்கொள்ளவே ஒப்புக்கொள்ளாது...

அதே நேரம்... இல்லை.... டெங்கு கட்டுக்குள்தான் இருக்கிறது... அப்படி இப்படி என்று மைக் கிடைத்தவர்கள் எல்லாம் உளறிக்கொண்டிராமல்... சம்மந்தப்பட்ட அமைச்சகம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.... தரமான மருந்துகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அதற்கான வாகன வசதிகள் என எல்லாவற்றையும் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்...

அதே நேரம்.. இதெல்லாம் அரசின் கடமை... நமக்கு குறை சொல்வது மட்டுமே வேலை.... என்று இருந்துவிடாமல்.... ஆங்காங்கே இருக்கும் இளைஞர்/மகளிர் குழுக்கள், நற்பணி மன்றங்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் பிளாஸ்டில் டப்பா, தேங்காய் சிரட்டை, டயர்கள் இன்னும் பற்பல கொள்கலன்களை உடனடியாக நீரின்றி பார்த்துக்கொள்ள வேண்டும்... (ஏரி- குளங்கள்-ஆறுகளில் மட்டும் நீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள மணல் மாபியாக்களும் , ரியல் எஸ்டேட் தாதாக்களும் இருக்கிறார்கள்... )

மேலும்.... நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு போன்ற நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற... டெங்கு வைரஸ்க்கு எதிரான , இரத்ததட்டுக்களை பெருக்க கூடிய மூலிகை மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்க முன் வர வேண்டும்...

எல்லா செய்தியையும் பிரேக்கிங் நியூசாக்கி பீதியை கிளப்புவதை வாடிக்கையாக கொள்ளாமல்... ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களில் அரசுக்கு துணை நின்று மக்களிடம் ஒரு பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்...

வேறென்ன சொல்ல..... சாமான்யன் அவ்ளோதான் சொல்ல முடியும்....

"நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாயன் திங்கணுமா..."


சமகால போராளிகள் கேட்கும் கேள்வி... அதிலும் குறிப்பாக தொப்புள் கொடி வார்த்தைகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் தேசிய போராளிகள்...

அவர்கள் கேட்கும் கேள்வி.... இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (இத இங்கிலீஸ் ல ஜி டி பி ன்னு சொல்லி நம்மாளுங்க நாங்களும் பொருளாதார மேதைகள்தான்னு காட்டிக்குவாங்க ... ஆஹா... அண்ணாச்சி என்னென்னவோ பேசுறாக.... வெவரமான ஆளுதான்னு நாமளும் கைதட்டுவோம்...) பெரும்பகுதியை தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களும் (புதுச்சேரியையும் சேர்த்தா அஞ்சு ) வடக்க நாலஞ்சு மாநிலங்களும் தான் உற்பத்தி செய்யுது... நாங்க உற்பத்தி செய்யுறத ஏன் மத்தவங்களுக்கு ஷேர் பண்ணனும்....?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.... எங்க முப்பாட்டன் திருவள்ளுவன் சொன்னது.... அப்புறம்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... யாதும் ஊரே ... யாவரும் கேளீர்ன்னு எங்க பாட்ட முப்பாட்டன் எல்லாம் ஆளுக்கொன்னா சொல்லி எங்க பண்பாட்டையும் நாகரீகத்தையும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கி இருக்காங்கன்னு மேடைபோட்டு பேசுவோம்.... சரி... இப்போ அத விட்டுடலாம்... அத இன்னொரு நாளைக்கு பேசலாம்...

இந்த கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் ன்னு சொல்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியில அவங்க சொல்ற மாதிரி ஒட்டுமொத்த இந்தியாவுல முழு தென்னிந்தியாவும், வடக்க ஒரு அஞ்சாறு மாநிலங்களும் தான் இருக்கு..இது முழு உண்மை இல்லன்னாலும்.... ஒரு குறிப்பிட்ட முக்கிய பங்கு இருக்கு..... இதுக்கு காரணம் என்னன்னா.... இங்க இருக்கவன் எல்லாம், அறிவாளி, உழைப்பாளி, நேர்மையானவான்... அங்க இருக்கவனெல்லாம் சோம்பேறி... முட்டாள் ன்னு அர்த்தம் இல்ல...

இந்த மாநிலங்கள் அமைந்திருக்க கூடிய பூகோள அமைப்பு.... ஒவ்வொன்னா பார்க்கலாம்..

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, பெல் நிறுவனங்கள், நெல்லையிலும், ஸ்ரீஹரிகேட்டாவிலும் அமைந்திருக்க கூடிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், அணு மின் நிலையங்கள், சேலம் இரும்பு உருக்காலை... அப்படி இப்படின்னு நிறைய மத்திய அரசு நிறுவனங்கள் தென்னிந்தியப்பகுதியில் அமையப்பெற்ற காரணம்.... பூகோள அமைப்பில் இருக்கும் உறுதி செய்யப்பட பாதுகாப்பு.... என்னதான் இன்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகள் வந்துவிட்டாலும், இவைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள் எளிதில் தாக்கி விடாதபடிக்கு தூரமான இடம்... சுற்றளவு மொத்தமும் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்த கூடிய கடல்.... இடையில் இருக்கும் இலங்கைக்கு இந்தியாவை தவிர்த்து வேறெங்கும் போக முடியாத நிர்பந்தம்... ஆக.... வட இந்திய மாநிலங்களை காட்டிலும் ரிஸ்க் ஃபேக்டர் குறைந்த தென்னிந்திய பகுதிகளில் இப்படியான தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது....
மேலும்... இயற்கையாகவும், செயற்கையாகவும் அமைந்த துறைமுகங்கள், நிலக்கரி படிமம், சுண்ணாம்பு கற்கள், தங்க படிமங்கள்...போன்ற கனிம வளங்கள் இங்குதான் அமையப் பெற்றிருக்கிறது.... வைகை, காவிரி, தாமிரபருணி , பாலாறு, கிருஷ்ணா போன்ற வற்றாத நதிகளின் போக்கும் இங்குதான் இருக்கிறது.... இந்த இயற்கை வளங்கள், பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசின் தொழிற்சாலைகள்.. எல்லாம் சேர்ந்துதான் தென்னிந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டது.... அப்படி மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் காரணமாக மேலும் மேலும் நிறைய தொழிலகங்கள் உருவானது....
ஆனால்...... இப்படி பாதுகாப்போ, இயற்கை வளங்களோ இல்லாத இடங்களை அதிக கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது இயல்பான விஷயம்.. அம்மாதிரியான இடங்களில் முதலீடும் இருக்காது என்பதுதான் எதார்த்தம்.... இயற்கை வளங்கள் நிறைந்ததால் ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு மட்டுமே இந்த மாநிலங்கள் ஜிடிபி யில் முக்கிய பங்காற்றுகிறதே தவிர.... இங்கு இருக்கும் மக்கள் மட்டுமே அறிவாளிகள், உழைப்பாளிகள் என்பதனால் இல்லை என்பதை இந்த பிரிவினைவாதிகளுக்கு யார் புரியவைப்பது...

ஒன்றாய் பிறந்த அண்ணன் தம்பிகளில் ஒருவர் ஊனமாக இருந்தால் அது அவர் தவறல்ல.... ஆனாலும்... இந்த பிரிவினைவாதிகள் உடன் அம்மாதிரி யாராவது பிறந்துவிட்டால்.... சம்பாதிக்கும் வயது வரும்வரை மொத்த குடும்பத்துடன் இருந்துவிட்டு, சம்பாதிக்க முடிந்த உடன் தான் சம்பாதிப்பது எனக்கு மட்டும்தான் என்ற குறுகிய நோக்கத்துடன் மட்டுமே வளர்ந்தவர்கள்....

ஒருவேளை இவர்கள் கேட்பதுபோல தனி நாடு கொடுத்துவிட்டால்.... இவர்களின் வழித்தோன்றல்கள் அடுத்த அரசியல் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்? தஞ்சாவூர் காரன் வெளைய வைக்கிற நெல்லை எல்லாருக்கும் கொடுக்கனுமா.... மதுர மல்லிய ஏன் சேலத்துக்காரனுக்கு கொடுக்கணும்... திருநெல்வேலி அல்வாவ ஏன் காஞ்சிபுரத்துகாரனுக்கு கொடுக்கணும்.... காஞ்சிபுரம் பட்ட ஏன் ராமநாதபுரத்துக்கு கொடுக்கணும்னு கெளம்புவானுங்க.... ஏன்னா இவனுங்க வளர்ந்த விதம் அப்படி...
இவர்களை எல்லாம் திருத்துவது நம் நோக்கமல்ல என்றாலும்... இந்த பொருளாதார மேதைகளின் உண்மை நோக்கத்தை சாமான்யர்களுக்கு புரியவைப்பதே இந்த சாமான்யனின் இந்த நீண்ட கட்டுரை...
நன்றி...

புகைப்படம் இணையத்திலிருந்து... புரிதலுக்காக மட்டும்

இலவசத்திற்கு அலையும் மக்கள்

எங்கள் பகுதியில் திருமண நாளின் முதல் நாள் பெண் அழைப்பு... அதற்கும் முந்தின நாள் மூன்றான் தண்ணீர் ஊற்றுதல்.. என்றொரு சடங்கு நடக்கும்... (இது பெரும்பாலான வட தமிழக மாவட்டங்களில் திருமண நாளின் முந்தின இரவில் நலங்கு வைத்தல் என்று நடத்தப்படுகிறது...)
இந்த மூன்றாம் தண்ணீர் ஊற்றுதல் என்ற நிகழ்வில், ஊரில் இருக்கும் சுமங்கலி பெண்களை அழைத்து மாப்பிள்ளை/ பெண் (அவரவர் வீட்டில்) இருவருக்கும் எண்ணெய் தேய்க்க சொல்வார்கள்... எல்லோரும் எண்ணெய் தேய்ப்பதில்லை என்றாலும்.. வயது முதிர்ந்த சுமங்கலிப்பெண்கள் எண்ணெய் தேய்த்து ஆசி கூறுவார்கள்...

அவர்கள் இணையப்போகும் திருமண வாழ்க்கை அமோகமாய் அமைந்து, குழந்தை செல்வங்களை பெற்று அவர்கள் நன்றாக வாழ்வதற்கும், அதுவரை அவர்களை பிடித்திருந்த பீடைகள் ஒழிந்து அவர்கள் வாழ்வில் அமைதியும், பொறுப்பும் வரவும் வேண்டும் என்பதற்கான ஆசி கூறும் வைபவம் அது... (அடுத்த இரண்டு நாட்களில் ஜென்மசனி பிடிக்கும் என்பது நிதர்சனம் )
சரி... விஷயத்திற்கு வருவோம்...

முன்னெல்லாம் இம்மாதிரி விசேஷங்களுக்கு அழைக்கப்படும் பெண்களுக்கு கொஞ்சம் பூ, கொஞ்சம் வெற்றிலை -பாக்கு, கொஞ்சம் சர்க்கரை-பொட்டுக்கடலை... என்று கொடுப்பார்கள்... பின்னாளில் வலிக்காமல் வந்த வருமானம் கூட கூட.... தங்களின் செல்வ வாளிப்பை பறை சாற்றும் விதமாக எவர் சில்வர் தட்டு, சொம்பு போன்ற அன்பளிப்புகளை வழங்குவதை வாடிக்கையாக்கி விட்டார்கள்...
இதுதான் சொல்ல வந்த விஷயமா.. என்றால்.... இதுவும் இல்லை.... மேற்கொண்டு படிக்கவும்...

ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள், ஒரு மாமியார் என மூன்று பேர் இருக்கும் பட்சத்தில்.... ஊரில்/உறவில் யாராவது இறந்தால்... மருமகள்களில் எவளாவது ஒருத்தி துக்கம் விசாரிக்க போகட்டும் என்று மாமியாரும்..... இந்த கெழட்டு முண்டம் சும்மாத்தான கெடக்கு.... எழவுக்கு போயிட்டு வரட்டும் என்று மருமகள்களும் ஒதுங்கிக்கொள்வார்கள்..... நாங்கல்லாம் ஒரே குடும்பம் தானே.... ஒரு ஆள் போனா போதும்....

ஆனால்... மேலே குறிப்பிட்ட மூனாம் தண்ணி விசேஷத்திற்கு மாமியார் தனியாகவும்... மருமகள்கள் தனியாகவும் செல்வார்கள்... மூன்று பேர் போனால் மூணு தட்டு கிடைக்கும்.. நாங்கல்லாம் தனித்தனியால்ல காச்சி குடிக்கிறோம்....

இதில் வசதியானவர், வசதி குறைந்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது... நம்மிடம் கோடி அளவு வசதி இருந்தாலும்.. இலவசமாய் கிடைக்கும் எவர் சில்வர் தட்டை விட்டுவிட்டால் ஜென்மமே வீண் என்ற மனநிலை...

இது எங்கள் பகுதி நடைமுறை என்றாலும்.... எங்கள் பகுதியில் மட்டும் இருக்கும் மனோநிலை அல்ல... ஒட்டு மொத்த தமிழகத்தையும் திராவிட சகதிகள் (சகதிகள் - எழுத்து பிழை அல்ல) இப்படித்தான் மாற்றி வைத்திருக்கின்றன....

இதை கழுவி களையப்போவது யார்... என்பதே மில்லியன் டாலர் கேள்வி....

ஏமாறப்பிறந்தவர்கள்

கன்னியாக்குமரியில் நிதி நிறுவனம் நடத்தியவர் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலை மறைவு... முதலீட்டாளர்கள் போராட்டம்... அரசு உடனடியாய் தலையிட்டு எங்கள் பணத்தை வாங்கித்தர வேண்டும் என்று கோரிக்கை..

இப்போ நாம யாரையாச்சும் குறை சொல்லணுமே.... சாட்டையை சுழற்றுவோமா...



ஒரு மாநகராட்சி-நகராட்சி- ஊராட்சியில் எந்த தொழில் தொடங்குவதென்றாலும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும் என்பது விதி.. அப்படி உரிமமில்லாமல் தொடங்கப்படும் நிறுவனம்/கடைகளை பூட்டும் அதிகாரம் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு உண்டு... டீக்கடை வைக்கிறவன், பொட்டிக்கடை வைக்கிறவன் எல்லாம் இப்படி உரிமம் பத்தி எல்லாம் கவலை படுறதில்ல... இங்க பெரிசா ஒன்னும் நடந்துடாது... பெரும்பாலும் கடன் சொல்லி சொல்லி டீ குடிச்சுட்டு, ஐநூறு ரூபா ஏறினதும் இருநூறு ரூபாய கொடுத்து, இத வரவு வச்சுக்கோ.... பேலன்ஸ் சீக்கிரம் கொடுத்துட்றேன்னு சொல்லி அவனை நம்பவச்சு கூடுதலா முன்னூறு ரூபாய் கடன் வாங்கி கணக்க அறுநூறா ஏத்தி நாமதான் அவனுங்கள ஏமாத்துவோம்.... அதனால அத விட்டுடலாம்... ஆனா... லட்சக்கணக்குல முதல் போட்டு தொழில் பண்றவன் கண்டிப்பா உரிமம் வாங்கணும்.. வரி கட்டனும்... அதுலயும் இந்த சிட் பண்ட்ஸ், பினான்ஸ், பாண் புரோக்கர் போல பொதுமக்கள் கிட்ட நேரடியா கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் பண்றவங்க கண்டிப்பா இந்த உரிமம் வாங்கியே ஆகணும்....

மேற்கொண்டு... இந்த சீட்டு நிறுவனம் பெரிய ஆபீசா போட்டு தான் கடை நடத்தி இருக்கான்... இதெப்படி அரசு நிர்வாகத்துக்கு தெரியாம போச்சு.... லைசன்ஸ் கொடுக்கும்போது அவனோட ப்ராஜெக்ட் ரிப்போர்ட் என்ன... அத அவன் எப்படி இம்ப்ளீமென்ட் பண்ண போறான்... அது ஆர் பி ஐ வரைமுறைகளுக்குட்பட்டதா... லொட்டு, லொசுக்கு ன்னு எல்லாத்தையும் செக் பண்ணித்தான் லைசன்ஸ் கொடுத்திருக்கணும்....

அதோட மட்டுமில்லாம... ஆண்டுக்கொருமுறை "படித்த" ஆடிட்டரை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் பண்ணும்போது, வரிய மட்டும் வாங்கிட்டு சலாம் போட்டு அனுப்பாம (அதுலயே நிறைய வரி ஏய்ப்பு செஞ்சு வருமான வரித்துறையையும் ஏமாத்தி இருப்பான்றது வேற விஷயம் ) அவன் என்ன பண்றான்னு ஒழுங்கா செக் பண்ணாம விட்டது யாரோட தப்பு?? உடனே ஆட்சியாளர்கள் மேல குத்தம் சொல்ல வேண்டாம்... ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைய உடனே அமல் செய்யனும்னு கிளம்பி போராட தெரியுது... ஏன்னா 25% சம்பள உயர்வு கிடைக்குமாம்.... ஆனா தன்னோட கடமையை ஒழுங்கா செய்யனும்னு எந்த அரசு ஊழியருக்கும் தோணவே இல்ல... இவனுங்கள என்ன பண்ணலாம்...??

சரி விடுங்க.... அவனுங்க என்னிக்குதான் செஞ்சாய்ங்க ,... இன்னிக்கு செய்ய??

நாம என்ன பண்றோம்....?? கந்து வட்டி வசூல் பண்றவன ஒருபக்கம் திட்டி மண்ணை வாறி தூத்திகிட்டே எவனாவது அதிகமா வட்டி கொடுக்கிறேன்னு சொன்னதும் என்ன... ஏது.... நீ ஒழுங்கா லைசன்ஸ் வாங்கித்தான் கடை போட்டிருக்கியா.... அதிகமா வட்டி கொடுக்கிறேன்னு சொல்றியே.... எப்படி கொடுப்ப......ன்னு எதை பத்தியும் கேக்காம, பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட கூட சொல்லாம நம்ம கிட்ட இருக்க காச கொண்ட கொட்டிடுவோம்.... பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொன்னா அவனும்ல முதலீடு பண்ணி ரொம்ப சம்பாதிச்சிடுவான்....

வங்கிகள், மியூச்சுவல் பண்ட்ஸ், காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் என்னென்ன புண்ணாக்கோ இருந்தாலும் அவன் எல்லாம் வட்டி கம்மியா தரான்... நாங்க நிறைய சம்பாதிச்சு சீக்கிரம் பணக்காரனாகனும்னு போயிடறது... அப்புறம் அவன் பொட்டிய கட்டிக்கிட்டு கிளம்பிட்டான்னா தலைல துண்ட போட்டுக்கிட்டு நேரா போலீஸ்காரன் தாலிய அறுக்க கிளம்பிட்றது.....

எத்தன ஈமு, தேக்கு, முதலாளி இல்லாத முதல் உலகம்னு டைப்பு டைப்பா ஏமாந்திருந்தாலும் நீங்க திருந்தவே போறதில்ல.... சனியன் புடிச்சவனுங்களா.... செத்து தொலைங்கடா..

ஓவர் ஆக்டிங்

சரவணா ஸ்டோர் சரவணன் விளம்பரப்படங்களில் நடிப்பதை பற்றி மூண்டு விதமான கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே,...
ஒன்று.... ங்கொய்யால இவன் மூஞ்சிக்கு ஹன்சிகா கேக்குதா.... ஆஞ்சநேயர் தம்பி மாதிரி இருந்துகிட்டு இதுக்கு ஏன் இந்த வேலை...

இரண்டு.... ஹ்ஹ்மம்ம்ம்ம்..... கொடுத்து வச்சவன்... அதான்யா... பணக்காரன் நினைச்
சா என்ன வேணா செய்யலாம்.... என்று பெருமூச்சு...



மூன்று.... ஏன்... அவருக்கு என்ன குறைச்சல்.... எம்பியே படிச்சிருக்கார்... நிறைய சாதிக்கணும்னு ஆர்வம் இருக்கு.. அதை செயல்படுத்தி பணம் பண்ண கத்து வச்சிருக்கார்.... அவர் ஏன் நடிக்க கூடாது....

சரவணனை விடுங்கள்.... ஆனால்.. இந்த கருத்து சொல்லும் மூன்று விதமானவர்களை பற்றி இருக்கும் உளவியல் விஷயத்தை பார்க்கலாம்...
முதலாவது வகையினர் மிகவும் இயல்பானவர்கள்... தன்னுடைய ஆதங்கத்தை .. கவனிக்கவும்... பொறாமை அல்ல.... ஆதங்கம்.... தன்னால் இப்படி பணக்காரனாக முடியவில்லையே.. என்றோ.... ஹன்ஷிகா போன்ற அழகிகளுடன் கை கோர்க்க முடியவில்லையே... என்றோ ஏங்குபவர்கள்.. அவர்கள் ஏக்கத்தை இப்படி விமர்சனமாக வெளிப்படுத்தி தீர்த்துக்கொள்பவர்கள்.... இவர்கள் இயல்பானவர்கள்...

இரண்டாவது வகை... சாமான்யர்கள்.... மற்றவர்களின் நிலைக்கு தன்னால் வர முடியவில்லையே.. என்று தன்னைத்தானே நொந்துகொண்டு அதை ஒரு பெருமூச்சாய் உதிர்த்து விட்டு தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் கவனத்தை திருப்பி விடுவார்கள்... இவர்கள்தான் சாமான்யர்கள்..

மூன்றாவது வகை தான் கொஞ்சம் வில்லங்கம்.... இவர்கள் தங்களை தாங்களே பெருமையாய் நினைத்துக்கொண்டு... அடடா.. பாருங்கள்.. என்னால் எல்லாவற்றையும் இயல்பாய் எடுத்துகொள்ள முடியும்.. எனக்கு யார் மீதும் பொறாமையோ-ஏக்கமோ இல்லை.... பாருங்கள்.. நான் எல்லோரையும் மதிக்கிறேன்... அவர்களின் திறமையை மதிக்கிறேன்... நான் நேர்மையாளன்.. என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள முயலும் ஆயாசக்காரர்கள்... இவர்கள் என்னதான் பெரிய மனதுக்காரர்கள் போல நடித்தாலும்.. உடன் இருந்து கவனிப்பவர்களால் மட்டுமே இவர்களது வக்கிர எண்ணத்தை உணரவும், அனுபவிக்கவும் முடியும்..

#ரொம்ப சீன் போடாதீங்கடே.... இயல்பா இருங்
கடே...

புதன், 27 செப்டம்பர், 2017

அப்பா.... அனாவசியம் அல்ல... அத்தியாவசியம்

ஒரு மனநல மருத்துவரின் பேட்டியை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தது.... நியாயமாக நாம் அதுமாதிரி பேட்டிகளில் எல்லாம் ஈடுபாடு காட்டுவதில்லை என்றாலும்... அந்த மருத்துவரின் அழகு என்னை சேனல் மாற்ற விடாமல் நிறுத்தியது... என்பதுதான் உண்மை...

ஆனால்.... அந்த பேட்டியின் ஊடாக அவர் சொன்ன ஒரு விஷயம் நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.... தன்னுடைய தந்தையின் செல்போனில் எட்டுவயது குழந்தை ஒன்று ப்ளூ வேல் கேம் டவுன்லோட் செய்து வைத்திருப்பதை பார்த்த அவரது தாயார்.. கவுன்சலிங் கொடுக்க சொல்லி இந்த மருத்துவரிடம் கூட்டி வந்திருக்கிறார்...

முதலில்.... அந்த குழந்தை விபரம் (விபரீதம்)புரியாமல் செய்திருக்கும் என்று நினைத்த மருத்துவர் மெதுவாக பேச்சுக்கொடுக்க... கிடைத்த விஷயம் அப்படி ஒரு அதிர்ச்சி தர கூடியது...
Image may contain: 1 person, closeup

குழந்தையின் தாயும் தந்தையும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ள... தாய் மீது கூடுதல் ஒட்டுதலுடன் இருக்கும் அந்த குழந்தை தந்தையை பழிவாங்க ப்ளூ வேல் கேமை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறது.... என்ன முடிவு என்பது தெரிந்தே....

இத்தனைக்கும் அந்த குழந்தையை அவர் திட்டியதோ- அடித்ததோ இல்லையாம்.... குழந்தைக்கு அவர் எப்போதுமே நல்ல தந்தையாகத்தான் இருந்திருக்கிறார்.... ஆனாலும்... அந்த குழந்தையின் சிந்தனை தாய்க்கு ஆதரவாக.... தந்தைக்கு தற்கொலைக்கு வழிகாட்டும் காரியத்தை செய்ய தூண்டி இருக்கிறது...

பெரும்பாலான அறிஞர்களும், ஆலோசகர்களும் சொல்லும் விஷயம்.... குழந்தைகளுக்கு முன்பாக சண்டை போடாதீர்கள்.... இது நல்ல விஷயம்தான் என்றாலும்... இதனை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல் நிறைய....

குழந்தைகள் தாயுடன் செலவழிக்கும் நேரம் தான் அதிகம் என்பதால்.. இயல்பில் தந்தையை விட தாயின் மீதே கூடுதல் ஈர்ப்புடன் இருக்கும்... நிறைய குழந்தைகள் தந்தை வாங்கி வரும் சாக்லேட்-சிப்ஸ் போன்றவற்றிற்காக மட்டுமே தந்தையை தேடும் நிலையும் உள்ளது... (இதில் தந்தைக்கும் பங்குண்டு... அதை சாவகாசமாக வேறொரு கட்டுரையில் கூடுதல் விரிவாக பார்க்கலாம் )

இப்படியான நிலையில் குழந்தைகள் தந்தையை விட்டு நிரந்தரமாக விலகாமல் இருக்கவும், ஒட்டுதல் ஏற்படுத்தவும் தாய்மார்கள் முனைய வேண்டும்.... குடும்பத்திற்கென தந்தை செய்யும் தியாகங்கள்.. அனுபவிக்கும் கஷ்டங்கள்... வருமானம் ஈட்ட படும் துயரங்கள்.. ஆகியவற்றை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்...

என்ன பிரச்சினை இருந்தாலும் கூடுமானவரை குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவனிடம் குறுக்கு விசாரணை செய்வதையோ- உறவுகளை பற்றி விமர்சிப்பதையோ... குறை கூறுவதையோ தவிர்க்க வேண்டும்... இதை பின்பற்றினாலே தொண்ணூறு சதவிகிதம்கு ழந்தைகளுக்கு முன்னான சண்டைகளை தவிர்த்து விடலாம்...

இதை கடைபிடித்தாலே நீங்கள் ஓரளவு நல்ல வளர்ப்பை கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்...

ஆனால்.. இவைகளை நீங்கள் கடை பிடிக்க வேண்டுமானால் முதலில் நீங்கள் உங்கள் கணவனை புரிந்துகொள்ள வேண்டும்...

இல்லை என்றால்.... உங்கள் குழந்தைகளே உங்களை விதவை ஆக்கும் விபரீதம் நிகழலாம்...

( நான் சம்பாதிக்கிறேன்.... விதவை வேஷம் எல்லாம் எனக்கெதற்கு என்பவர்கள் இதை படித்ததையே மறந்து விடலாம்... இது உங்களுக்கான கட்டுரை அல்ல )

பாதுகாப்புக்காக ஒரு உறவு



எம் தமிழ் சமூக பெண்களிடையே வட இந்திய பண்டிகையான "ரக்ஷா பந்தன் " என்பது பற்றி பொதுவாகவே ஒரு தவறான புரிதல் நிலவுகிறது...
Image may contain: one or more people and jewelry
ரக்ஷா பந்தன் என்பது ஒரு ஹிந்தி வார்த்தை.... ரக்ஷா என்றால் பாதுகாப்பு (Defence) என்றும்... பந்தன் என்றால்... பிணைப்பு ... அதாவது சொந்தம் என்றும் அர்த்தம் வரக்கூடிய சொல்...

அதாவது, பெண்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக இருக்கும் சொந்தங்களுக்கு நன்றி சொல்வதாகவோ - அல்லது பாதுகாப்புக்கென புதிய பிணைப்புகளை (சொந்தங்களை) உருவாக்கிக்கொள்ளவோ உருவாக்கப்பட்ட, கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகை....

அந்நாளில் அலங்கரிக்கப்பட்ட ஒரு கையிற்றை ஒரு ஆணின் கையில் கட்டுவார்கள்... பெண்ணுடன் பிறந்த ஆண் மகனோ... அந்த பெண்ணை சகோதரியாக நினைக்கும் ஆணோ தான் அவ்வாறான பாதுகாப்பை கொடுக்க முடியும் என்பது ஒரு பொதுவான கருத்தென்றாலும்.... அந்த சகோதரன் மட்டும் தான் அப்படியான பாதுகாப்பை கொடுக்க முடியும் என்பது உண்மை அல்ல...

ஒரு பெண்ணுக்கு கணவனிடம் பாதுகாப்பு இல்லையா என்ன??

இவன் தன்னை பாதுகாப்பான் என்ற நம்பிக்கையை எந்த ஆண் மீது ஒரு பெண் வைக்கிறாளோ..... எந்த ஆணுடன் இருந்தால் பாதுகாப்பாக, நிம்மதியாக இருக்கிறோம்.. என்று ஒரு பெண் உணர்கிறாளோ.... அந்த ஆணுக்கெல்லாம் "ராக்கி " கட்டலாம்....

அது கணவனாக இருந்தாலும் சரி... காதலனாக இருந்தாலும் சரி...

# வாங்க செல்லங்களா.... நீங்க எத வேணா கட்டுங்க.... நாங்க அப்படித்தான்....

ஸ்ட்ரெயிட்டா சி எம் தானா ?



உங்க உழைப்பு... நீங்க சம்பாதிக்கிறீங்க..... அத நீங்க எவனுக்கும் கொடுக்கணும்னு அவசியமே இல்ல..... நீங்க ஏன் அந்த விஷயத்துல உதவல.... இந்த விஷயத்துல உதவல.... மக்களுக்கு என்ன செஞ்சீங்க.... உங்களுக்கு சேவை மனப்பான்மை இல்ல.... இப்படி எல்லாம் யாரும் யாரையும் கேக்க முடியாது.... ஏன்னா ... நம்ம சம்பாதிச்ச காச எடுத்துக்கொண்டு போய் எவனுக்கும் உதவித்தான் ஆகணும்னு கட்டாயம் இல்ல.... அது உங்க உரிமை.. உங்க விருப்பம்.... செஞ்சாலும் செய்யலாம்.... செய்யாட்டியும் இருக்கலாம்... எவனும் சம்பாதிச்சு கொண்டுவந்து நம்மகிட்ட கொடுக்கல.... அப்புறம் எப்படி "நீ அத செஞ்சியா... இத செஞ்சியா"ன்னு கேள்வி கேக்க முடியும்??

சரிதானே ரஜினி/கமல்.... நான் சொல்றது....??
Image may contain: 2 people, people smiling, beard
கண்டிப்பா இத நீங்க மறுக்கவே மாட்டீங்க.... ஆனா... ஆனா...

அப்படி நீங்க சம்பாதிச்சதோட மூடிகிட்டு உங்க வேலைய பார்த்துகிட்டு, உங்க குடும்பத்த பார்த்துகிட்டு இருந்திருந்தா மட்டும் தான் மேல உள்ளது பொருந்தும்.... எப்போ நீங்க முதலமைச்சர் நாற்காலிய குறிவச்சு, இப்போ எவனும் இல்ல.... நம்மோட பாப்புலாரிட்டிய யூஸ் பண்ணி நாமளும் தான் கொஞ்ச நாள் அதிகாரம் பண்ணி பார்ப்போமேன்னு அரசியல் பக்கம் வர துடிக்கிறீங்களோ அப்போவே முதல் பாரால சொல்லி இருக்கிற விஷயத்துல இருந்து நீங்க அவுட் ஆயிட்டீங்க....

ஓட்டுரிமை இருக்கிற/இல்லாத ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் உங்கள கேள்வி கேப்பான்... நீங்க சம்பாதிச்சதுல இருந்து பங்கு கொடுக்கலன்னு பிச்சக்காரத்தனமா எல்லாம் கேக்கல..... எங்க பிரச்சினைகள் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?? எங்களோட எத்தனை அன்றாட/ வாழ்வாதார பிரச்சினைகள்ள எங்க கூட நின்னிருக்கீங்க??? இதுவரை எங்களுக்காக என்ன கிழிச்சீங்க... இப்போ எங்களை ஆள துடிக்கிறீங்க ??

மொதல்ல இறங்கி வெளில வாங்க.... ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு பாருங்க.... மக்களோட பிரச்சினைகள் என்னன்னு தெரிஞ்சுக்குங்க.... மக்களோட மக்களா கொஞ்ச நாள் நின்னு பாருங்க..... கதிராமங்கலம், நெடுவாசல் விவசாயிகள் பிரச்சினைகள்... காவிரி, முல்லை-பேரியாறு , கிருஷ்ணா போன்ற விவசாய - குடிநீர் ஆதார பிரச்சினைகள் என்னன்னு அவங்களோட நின்னு தெரிஞ்சுக்குங்க... மீனவர்கள் பிரச்சினை என்ன்னன்னு அவங்களோட நின்னு தெரிஞ்சுக்குங்க.... சென்னை மக்களோட குடிநீர் பிரச்சினைகள்... சாலைப்பிரச்சினைகள்ள அவங்க கூட நின்னுங்க....

அதுக்கான தீர்வுகள் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.... அத செயல்படுத்த நீங்க என்ன திட்டம் வச்சிருக்கீங்க... நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி வச்சிருகீங்கன்னு சொல்லுங்க....

இதெல்லாம் செஞ்சப்புறம் நாங்க முடிவு பண்றோம்..... நீங்க அந்த நாற்காலிக்கு தகுதியானவரா... இல்லையான்னு...

அத விட்டுட்டு....தமிழ்நாடு என்னமோ உங்க பாட்ட- முப்பாட்டன் சொத்து மாதிரி நாலு விசிலடிச்சான் குஞ்சுங்க உங்க போஸ்டர்க்கு பாலூத்தின உடனே முதலமைச்சர் கனவு காண்ட்றீங்க......

எங்களை எல்லாம் பார்த்தா சொம்பு மாதிரி தெரியுதா என்ன ???

வரலாற்றை திரிக்காதீர்கள்

ஒரு விறகு வெட்டி ஆற்றங்கரையில் விறகு வெட்டும் பொழுது அவனது கோடரி தண்ணீரில் வழுந்துவிட்டதாகவும்... உடனே ஒரு தேவதை வந்து தங்க, வெள்ளி, இரும்பு கோடரிகளை கொடுக்க... தங்க-வெள்ளிக்கு ஆசைபடாத விறகு வெட்டிக்கு மூன்று கோடரிகளையும் அந்த தேவதை கொடுத்துச்சென்றதாகவும் நான் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது ஒரு கதை இருந்தது...

பின்னாளில் அது நவீன வளர்ச்சி பெற்று வேறுமாதிரியாய் சொல்லப்பட்டது.... அதே விறகுவெட்டி மற்றுமொருநாள் அதே ஆற்றங்கரையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க.... அதே தேவதை வந்து "ஏன் அழுகிறாய்" என கேட்டதாம்.... உடனே விறகு வெட்டி... என்னுடைய மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்.. என்றானாம்...

நீரில் மூழ்கிய தேவதை கையில் அனுஷ்காவை தூக்கிக்கொண்டு வந்ததாம்..... இவளா உன் மனைவி என தேவதை கேட்க.... விறகுவெட்டி , சற்றும் யோசிக்காமல் ஆமாம் ஆமாம்... என்றானாம்....



எல்லாமறிந்த தேவதைக்கு இவன் பொய் சொல்வதும் தெரிந்துவிட்டது.... அடே பாவி... தங்க, வெள்ளிக்கு கூட ஆசைப்படாத நீ.... ஒரு அழகான பெண்ணுக்கு ஆசைப்பட்டு இவள்தான் என் மனைவி என்று பொய் சொல்கிறாயே.... என கேட்டதாம்....
Image may contain: 1 person, smiling, closeup
உடனே விறகுவெட்டி.... அப்படி எல்லாம் இல்லை.... நீ முதலில் இவளை காட்டுவாய்... பிறகு நயன்தாராவை காட்டுவாய்... மூன்றாவதாக என் மனைவியை கொண்டுவருவாய்..... நான் இவள்தான் என் மனைவி என்ற உடன்... இந்தா.... மூன்றையுமே வைத்துக்கொள்... என கொடுத்துவிட்டு சென்று விடுவாய்.... ஒருத்தியிடம் சிக்கி சீரழிந்தே சமாளிக்க முடியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன்.... இதில் இன்னும் இரண்டு பெண்களை என்ன செய்ய... அதனால்தான் நான் முதலில் நீ ஒரு பெண்ணை காட்டியதும் இவள்தான் என் மனைவி என்று சொல்லிவிட்டேன்... என்றானாம்....


நகைச்சுவைக்காக ஒரு பழைய கதை புதிதாக எடிட் செய்யப்பட்டது... நாமும் ரசித்தோம்.... அது வெறும் கதை..... ஆனால்... சமகால இணைய எழுத்தாளர்கள் தங்கள் ஜாதியில் பிறந்த தலைவர்களை தூக்கிப்பிடிப்பதாய் நினைத்துக்கொண்டு ( கவனிக்கவும்... ஜாதித்தலைவர்கள் இல்லை... ஜாதியில் பிறந்த தலைவர்கள் ) வரலாற்று தகவல்களை எடிட் செய்து வெளியிடுகிறார்கள்....

இன்று காலை அப்படி ஒரு தகவலை காண நேர்ந்தது.... நேதாஜி ஹிட்லரை காண ஜெர்மன் சென்றிருந்தபொழுது அங்கு வந்து நேதாஜியின் தோளில் கை வைத்ததை உணர்ந்த நேதாஜி... திரும்பி பார்க்காமல்... "ஹவ் ஆர் யு ஹிட்லர்" என்று கேட்டதாகவும்... ஒரிஜினல் ஹிட்லர் வரும் முன்பே ஹிட்லரின் தோற்றத்தில் வேறு சிலர் இருந்தாலும் கூட ஒரிஜினல் ஹிட்லரை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு நேதாஜி "என் தோளில் கை வைத்து பேசக்கூடிய தைரியம் ஹிட்லர் ஒருவருக்கு மட்டுமே உண்டு... ஹிட்லர் தோற்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் என்னுடன் கை குலுக்கினார்கள்... உண்மையான ஹிட்லர் மட்டுமே என் தோளில் கை வைத்து பேசினார்..." என்றாராம்...

Image may contain: 1 person
இப்படி ஒரு தகவலை சில காலத்திற்கு முன்பே சில இடங்களில் நான் படித்திருக்கிறேன்.... இன்று காலையில் படித்த தகவலில் இந்த தகவல் மேலும் எடிட் செய்யப்பட்திருந்தது... கூடவே நேதாஜி... ஒரிஜினல் ஹிட்லரை தவிர என் தோளில் யார் கைவைத்திருந்தாலும் என் பாதுகாவலன் முத்துராமலிங்க தேவர் அவனை சும்மா விட்டிருக்க மாட்டார்... என்று நேதாஜி சொன்னதாகவும்... ஹிட்லர் உடனே முத்துராமலிங்க தேவரை பற்றி நீண்ட நேரம் விசாரித்துவிட்டு... இதுபோல ஒரு பாதுகாவலன் எனக்கில்லையே... என வருந்தியதாகவும் நீண்டிருந்தது... அந்த செய்தி...

தங்கள் ஜாதியை சேர்ந்த தலைவரை தூக்கிப்பிடிப்பதாய் நினைத்து குப்பற தள்ளி இருந்தார் அந்த அன்பர்...

உங்களின் கற்பனை திறனை நான் மெச்சுகிறேன்... அதை கதை எழுதுவதில் காட்டுங்கள்..... உண்மைச்சம்பவங்களை திருத்திகாட்ட நினைக்காதீர்கள்.... நீங்கள் தூக்கி பிடித்துதான் முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் உயர வேண்டும் என்ற அவசியமே இல்லை.....இப்படி திருத்தப்பட்ட செய்திகளின் மூலம் நிஜமான ஒரு தலைவனை பற்றிய மற்றனைத்த நிஜத்தகவல்களும் கூட சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டு, நகைச்சுவை ஆகி விடும்...

அன்புட்டுதேன்...