சனி, 20 ஜூன், 2015

வாங்க ஜெயிக்கலாம் - 3

ண்ணுக்கு தெரியாத எதிரிகள்...
***************************
பொதுவாக ஒரு காரியத்தை தொடங்கும் போது அந்த செயலுக்கு தேவையான கருவிகள், செயல்பாட்டிற்கான திட்டமிடல், பொருளாதார பலம் எல்லாவற்றையும் முன் கூட்டியே தயார் செய்த பின் தொடங்கினால் கூட சில தடங்கல்கள் வரும்..

இதனை ஆத்திகர்கள் விதி/ கெட்ட நேரம் / கிரக கோளாறு என்றெல்லாம் சொல்வார்கள்... பகுத்தறிவாளர்கள் வேறு ஏதேனும் பெயரில் கூட சொல்லலாம்... ஆனால் தடங்கல்களும் அதனால் ஏற்படும் மன உளைச்சல் . பொருளாதார இழப்பு ஆகியவைக்கு ஆத்திகன் நாத்திகன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை...

           திரி யாரும் இல்லாமல் நம் தன்னம்பிக்கை உடைய வைக்கும் அது போன்ற சமயங்களில் எந்த காரணத்திற்காகவும் நம்முடைய தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது.. 
என்னுடைய வாழ்வில் அது போல பல சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஒன்றை நினைவு கூர்கிறேன்..
வளைகுடா நாடுகளில் ஓட்டுனர் உரிமம் என்பது மிக பெரிய தகுதியாக கருதப்படுகிறது.. ஒரு பொறியாளர், ஒரு தொழில் நுட்ப வல்லுனருக்கு நிகரான தகுதியாக யூ ஏ ஈ நாட்டின் ஓட்டுனர் உரிமம்.. அப்போது நான் சந்தித்த எல்லோருமே கேட்கும் கேள்வி "லைசென்ஸ் வச்சிருக்கியா..??"
நான் அந்த நாட்டில் பணியிலமர்ந்த சமயத்தில் அங்கே வேலைக்கான விசாவில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தங்களது கடவு சீட்டு மற்றும் விசாவை காண்பித்து ஓட்டுனர் உரிமம் எடுபதற்கான பயிற்சியில் சேரலாம்... நான் விசிட் விசா என்று சொல்ல கூடிய குறுகிய கால விசாவில் வந்து வேலை தேடிக்கொண்டபடியால் 3 வருட விசாவிற்காக சில காலம் காத்திருக்க வேண்டி வந்தது.. ஒரு பெரும் போராட்டத்திற்கு இடையே வேலையும் அதற்கான 3 வருட விசாவும் கிடைக்க 4 மாதங்கள் ஆனது.. விசா ஸ்டாம்ப் செய்த மறுநாளே அருகில் இருக்கும் கலதாரி டிரைவிங் ஸ்கூலில் விண்ணப்பிக்க சென்றேன்... 

நான் சென்ற அன்று, யூ ஏ ஈ போக்குவரத்து துறை ஒரு புதிய நியமத்தை அறிமுகம் செய்தது... ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் பணி செய்யும் நிறுவனத்திலிருந்து "ஆட்சேபனை இல்லா சான்றிதழ்" வாங்கி வர வேண்டும் என்று...
முதல் கோணல்... அன்று விண்ணப்பிக்க இயலவில்லை... நான் பணி செய்த நிறுவனத்தின் முதலாளி ஒரு வாரம் வெளிநாடு சென்று இருந்ததால் அவர் திரும்பி வந்த பிறகே என்னால் விண்ணப்பிக்க முடிந்தது...

விண்ணப்பித்து பணமெல்லாம்கட்டியபின் ஒரு மாதத்திற்கு பிறகே எனக்கு கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டது.. ஒரு ஹிந்திமொழிக்கார பயிற்சியாளர் ஒரு நாள் பயிற்சி கொடுக்க... அவர் சொல்வது எனக்கு புரியவில்லை.. நான் சொல்வது அவருக்கு புரியவில்லை... அந்த பயிற்சி நிறுவன மேலாளரிடம் சொல்லி தமிழ் தெரிந்த பயிற்சியாளரை கண்டுபிடித்து அவரிடம் சென்றேன்.. ஒரு நாளைக்கு 40 நிமிடம் பயிற்சி.. அவர் தமிழராகையால் அவரது சொந்த கதை, சோக கதை எல்லாம் சொல்லி 20 நிமிடங்கள் கழித்துவிட்டு மீதமிருக்கும் 20 நிமிடங்கள் மட்டும் பழக்குவார்... இடையிடையே அவருக்கு டிபன், டெலிபோன் கார்டு, மாத்திரை இத்யாதி இத்யாதி எல்லாம் என்னுடைய காசில் வாங்கித்தர வேண்டும். அவ்வப்போது 100 கொடு 200 கொடு என்றும் கேட்பார்.. எங்கே இல்லை என்று சொன்னால் ஒழுங்காக சொல்லிக்கொடுக்கமாட்டாரோ என பயந்து நானும் அதை எல்லாம் வாங்கி தருவேன்..

இப்படியாக சுமார் 40 நாட்கள் நகர்ந்தது.. இதற்கு இடையே ப்ரீ-ரோடு டெஸ்ட் என்ற ஒரு டெஸ்ட்.. அதில் இரண்டு முறை ஃபெயிலாக்கி மேலும் 20 வகுப்புகள் நீட்டித்தனர்... ஒரு வழியாக ரோடு டெஸ்ட்டிற்கு வந்தேன்.... முதல் டெஸ்ட்.. இதில் பாஸ் செய்துவிட்டால் கையில் லைசென்ஸ்..

முதல் டெஸ்ட் ஃபெயில்..   
அன்றுதான் போக்குவரத்து துறை மற்றொரு புதிய நியமத்தை கொண்டு வந்தது... ஆம்... அதுநாள் வரையில் ஒரு டெஸ்டில் ஃ பெயிலானால் அடுத்து 7 வகுப்புகள் பயிற்சி முடித்து 8 வது நாள் அடுத்த டேஸ்டிற்கு போகலாம்.. ஆனால் புதிய நியமம், ஒரு டெஸ்டில் ஃ பெயிலானால் 50 நாட்கள் காத்திருக்க வேண்டும் அடுத்த டேஸ்டிற்கு என்ற விதி அமலானது... இந்த 50 நாட்களுக்கு நடுவில் எப்போது அவர்களுக்கு நேரம் கிடைக்குமோ அப்போது 7 வகுப்புக்கு நேரம் ஒதுக்குவார்கள்...
பயிற்சி வகுப்பு முடிந்து சுமார் ஒருமாதகாலம் இருந்துவிட்டு நேரடியாக தேர்வுக்கு சொல்லும் பொது எது ஆகிசிலேடர், எது கிளச் என்பது கூட மறந்து போயிருக்கும்... ஒரு முறை கியர் போடாமல் ஆக்சிலேடரை அழுத்தி விட்டேன்.. ஃபெயில்.. ஒரு முறை சீட் பெல்ட் போடவில்லை... ஃபெயில்... ஒருமுறை கண்ணாடி சரி செய்யவில்லை ஃபெயில்.. ஒருமுறை பக்க கண்ணாடிகளை பார்க்கவில்லை ஃபெயில்.. இப்படியாக என்னுடைய ஓட்டுனர் உரிம போராட்டம் கஜினி முகமதுவை விட அதிகமாகிக்கொண்டே இருந்ததே தவிர கிடைத்த பாடில்லை...

இதற்கிடையில் அந்த பயிற்சியாளருக்கு (தமிழர்) என்னால் பணம் கொடுத்து மாள முடியவில்லையாதலால் ஒரு பாகிஸ்தானிய பயிற்சியாளரை அமர்த்திக்கொண்டேன்... ஓட்டுனர் உரிமம் தான் எனக்கு சவால் விட்டதே தவிர ஹிந்தி மொழியை கற்பது எனக்கு எளிதாக இருந்தது,... பாகிஸ்தானிய பயிற்சியாளரை தேர்ந்தெடுத்த சமயம் ஹிந்தி மொழியை சரளமாக பேச கற்றிருந்தேன்...

ஒரு முறை தேர்வில் ஃ பெயிலானால் அடுத்து 50 நாட்கள் காத்திருக்க ஒருபுறம்... ஒருமுறை ஃ பெயிலானால் பயிற்சி வகுப்புகள், தேர்வு கட்டணம் ஆகியவை 400 திராம்ஸ்..( இந்திய மதிப்பில் அப்போது சுமார் 5000 ரூபாய்) அந்த தேர்வு என்பது 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே... .
ஒவ்வொருமுறை தேர்வுக்காக ஓட்டுனர் இருக்கையில்

ஒரு தேர்வில் ஃ பெயிலானால் அன்று சென்று வயிறும் மனமும் நிறைய பிரியாணி சாப்பிடுவேன்.. வாயக்கட்டி வயித்த கட்டி 3 நிமிஷத்துல 400 திராம்ஸ் போச்சேய்யா... நல்லா சாப்பிடுவோம் என்று அன்று மட்டும் நினைப்பேன்... அடுத்த நாள் முதல் வழக்கம் போல காய்ந்த ரொட்டி தான்...
10 டெஸ்ட், 11 வது டெஸ்ட், 12 வது டெஸ்ட்..... ம்ம்ஹூம்... ஒண்ணும் பாச்சா பலிக்கல ... 13 வது டெஸ்ட்... அன்னிக்கு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தேன்..

எப்போதும் ஓட்டுனர் இருக்கையில் அமரும்போதும் தேர்வு அலுவலரை கண்டதும் லேசாக நடுக்கம் இருக்கும்.. பயம் வரும்...ஆனால் இன்று..."எப்படியும் நீ ஃ பெயிலுன்னுதான் சொல்ல போற... உனக்கென்னடா பயப்படறது.. " என்று எனக்குள்ளாக சொல்லிக் கொண்டேன்.. இருக்கையை சரி செய்து கண்ணாடியை சரி செய்து, பெல்ட் மாட்டி அந்த தேர்வு அலுவலரை திரும்பி பார்த்தேன்.. "போ.." என்றார்... கிளச் , கியர், ஆக்சிலேட்டர்... கார் வழுக்கிக்கொண்டு ஓடியது... 70.. 80..90.. கூட்டினேன்.. இடம்.. வலம்.. சிக்னல்... எல்லாமே ஒழுங்காக போனது... 
பாஸ் .. என்று என்னுடைய பேப்பரில் எழுதி கையொப்பமிட்டார் அந்த அலுவலர்...
ஒருவழியாக கிடைத்து விட்டது... இதற்காக நான் செலவிட்ட தொகை.. இந்திய மதிப்பில் சுமார் ஒன்னேகால் லட்சம்.. நம்ம ஊர்ல கார் சொந்தமா வாங்கி நாலஞ்சு இடத்துல இடிச்சாவது கத்துகிட்டிருக்கலாம்...

இந்த சம்பவங்களில் எது எனது வெற்றியை தள்ளிப்போக செய்தது..?? யாரை குற்றம் சொல்ல முடியும்?? ஒவ்வொரு படியாக நான் ஏறி வரும்போதும் அங்கே ஒரு புதிய நியமத்தோடு என்னை வரவேற்ற அரசையா...?? இல்லை என்னிடம் வாங்கித்தின்றுவிட்டு தன்னுடைய கடமையை சரிவர செய்யாத அந்த பயிற்றுனரையா.. இல்லை என்னுடைய பயத்தையா...
என்னுடைய வெற்றி தள்ளிப்போக எதோ ஒரு .காரணம். ஆனால் அது என்னால் வெற்றிகொள்ள முடியாத, சந்திக்க முடியாத , கண்ணுக்கு தெரியாத காரணங்கள்.. என்னுடைய ஒவ்வொரு முயற்சி தோல்வியுறும் போதும் இதோடு விட்டு விடலாமா.. என்று ஒரு எண்ணம் வரும்,.. ஆனால் ஒருவேளை இந்த தேர்வில் தேர்வாகி விட்டால் லைசென்ஸ் கையில் கிடைத்து விடுமே.. விட்டால் இதுவரை செலவு செய்த தொகை வீணாகி விடுமே எண்டு புலிவாலை பிடித்த கதையாக ஓடினேன்.. எப்படியும் அடுத்த தேர்வில் வென்று விடலாம் என்று நம்பினேன்.. என்னுடைய நம்பிக்கை ஒவ்வொரு முறை தோற்ற போதும் அடுத்த வாய்ப்பில் வெல்லலாம் என நினைத்தேன்.. அதுவே என்னுடைய தன்னம்பிக்கை.. அந்த நம்பிக்கையை மட்டும் இழந்திருந்தால் என்னால் வென்றிருக்க முடியாது...
ஆகவே உங்களுக்கு வரும் உங்களுக்கு அதை நன்றாய் கற்றுக்கொள்ள..., உங்களுக்கு அதன் மீது இருக்கும் பயத்தை போக்க கிடைக்கும் வாய்ப்பு என்று மட்டும் நினையுங்கள்.. எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை மட்டும் . இழக்காதீர்கள்.

வெற்றி நிச்சயம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக