சனி, 20 ஜூன், 2015

தேவலோகத்திலிருந்து அசுரலோகம் நோக்கி தமிழ் சினிமா...

சமீப கால திரைப்படங்களில் எதிர்மறை பாத்திரங்கள், சமூக விரோதிகள் கதாநாயகனாக சித்தரிக்கப்படுகிறார்கள்.... கதாநாயகன் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் கூட அவரும் ஒரு ரவுடி போல செயல்படுவதாகவே காட்டப்படுகிறது... அப்படியும் அந்த கதாநாயகன் நல்லவராக மட்டுமே இருந்தால் அந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் சகல சமூக விரோத செயல்களையும் செய்தாலும் ஒரு பெரிய மனிதனாக, சமூக அந்தஸ்துள்ள வசதியான மனிதனாகவே காட்டப்படுகிறது...



தேவலோகம், அரண்மனைகள் என்று மிதந்துகொண்டிருந்த தமிழ் சினிமாவை கட்டி இழுத்து பூமிக்கு கொண்டுவந்தவர் கடந்த தலைமுறை இயக்குனர் திரு.பாரதி ராஜா அவர்கள்... அவரை தொடர்ந்தே நிறைய திரைப்படங்கள் நகரத்து / கிராமத்து பின்னணி நோக்கி நகர்ந்தன... "நாராயண நாராயண" என்று சொல்லிக்கொண்டு ரம்பை - ஊர்வசிகள் புடைசூழ மேகங்களில் மிதந்தபடி பாற்கடலில் பாம்பின் மேல படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனை பார்க்க நுழையும் நாரதமணி முதல்.... "யாரங்கே.. முரசு ஒலிக்கட்டும்...பரணி பாடட்டும்..எதிரிகளின் தலையை கொய்ய வாளெடு .. புறப்பட்டு போர்க்களம் நோக்கி.." என்று கர்ஜித்த அரசன் வரையிலான கண்ணில் காணாமல் கற்பனையிலும் வரலாற்றிலும் கண்ட கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடமாடிய தமிழ் சினிமாவில் நமது ஊரை, நமது தெருவை, நமது வயற்காடுகளை , நமது மனிதர்களை, நம் வீட்டு சமையலடுப்பை, சுள்ளி பொருக்கும் சிறுமியை, தொட்டில் கட்டும் தாய்மாரை, ஏர் ஓட்டும் அண்ணனை, சுற்றித்திரியும் தம்பியை.. என எதார்த்த மனிதர்களை கண்னுக்கு முன்னால் செல்லுலாய்டு பிம்பங்களாய் பார்த்ததும் பரவசப்பட்டோம்...

இப்போது இயக்குனர்களாயிருகும் நிறைய பேர் அப்போது கண்ட கனவுகள் தான் இன்று அவர்களை இயக்குனர்களாய் நம் முன் நிறுத்தி இருக்கிறது... இவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் எதிர்மறை பாத்திரங்களை கதாநாயகர்களாய் சித்தரிக்க தொடங்கி இருக்கிறார்கள்... இதற்கு இவர்கள் சொல்லும் காரணம்... "நாங்கள் சமூகத்தில் நடப்பதை தான் சொல்கிறோம் நிஜத்தில் இதைவிட இன்னும் மோசமாகவெல்லாம் நடக்கிறது.."
ஒப்புக்கொள்கிறோம் அய்யன்மீர்.... நீங்கள் புதிதாக எதையும் கற்பனை செய்யவில்லைதான்.... ஆனால் சமூகத்தின் எங்கோ ஒரு இருட்டு மூலையில் அல்லது அந்த பகுதிகளில் வசிப்பவர்களில் கால்வாசி பேருக்கு மட்டுமே தெரிந்த அந்த விஷயத்தை ஜிகினா கனவுகளாய் மாற்றி உலகத்திற்கே கொண்டு போயல்லவா சேர்கிறீர்கள்...?? இதை ஏன் நீங்கள் யோசிப்பதில்லை....??
நேற்று நீங்கள் எல்லாம் சிறுவர்களாய்.. இளைஞர்களாய் இருந்தபோது எப்படி சினிமா உங்களுக்குள் கனவை விதைத்ததோ.... அதே போல் இன்றைய சிறுவர்களுக்கும் விதைக்குமல்லவா...?? நேற்று உங்களுக்குள் கனவை விதைத்த சினிமாவில் மகா விஷ்ணு இருந்தார்... நாரதமுனி இருந்தார்.. பார்வதி தேவியாரும் விஷ்வாமித்திரரும்... அடுத்ததாக நம்மூர் மனிதர்களும், இலந்தை முட்களும் , இண்டம் புதர்களும், ஊருக்குள் வரும் ஒற்றை அரசாங்க பேருந்தும் இருந்தது.... ஆனால் இன்று உங்களால் உருவாக்கப்பட்டு இன்றைய சிறுவர்களின்- இளைஞர்களின் மனதில் கனவை விதைக்கும் திரைப்படங்களில் என்ன இருக்கிறது..?? அரிவாள், ரத்தம், துப்பாக்கி, சுமோ-குவாலிஸ் கார்கள்...
இந்த கனவு நாளைய சமுதாயத்தில் நிஜமாகும்... 

அப்போது பாதிக்கப்படுபவர்களில் உங்கள் வாரிசுகளும் இருக்கலாம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக