புதன், 7 செப்டம்பர், 2016

உறவை பேணுங்கள்



"அடக்கம் செய்ய வழி இல்லாமல் மகனின் உடலை தானமாக கொடுத்த பெண்"

நண்பர் ஒருவர் இந்த பத்திரிகை செய்தியை பதிந்து "மனிதம் செத்து விட்டதா...?" என்று ஒரு நெருப்புக்கேள்வியை வீசி இருந்தார்... தகவலை மேலோட்டமாக பார்த்துவிட்டு "வருந்த தக்க நிகழ்வு" என்று அந்நேரத்தில் பின்னூட்டமிட்டு நகர்ந்து விட்டாலும் அந்த கேள்வி மனதில் ஆழமாய் தைத்து ஊவாமுளாய் உறுத்திக்கொண்டே இருந்தது..

நிஜமாகவே மனிதம் செத்து விட்டதா???அப்படியானால்..... இரத்தம் வேண்டிய தகவல்கள் பதிந்த உடன் ஓடிச்சென்று உதவுகிறார்களே.... கண் தானம்- உடலுறுப்பு தானம் செய்கிறார்களே....( உடலுறுப்பு தானத்தில் நடக்கும் வஞ்சகம் பற்றி நாம் ஏற்கெனவே பதிந்திருக்கிறோம்) எத்தனையோ பேர் ஏமாற்றுவது தெரிந்தும் கூட மருத்துவ / கல்வி உதவி என்றால் கையில் கிடைத்த பணத்தை அனுப்புகிறார்களே....

அப்புறம் எப்படி மனிதம் மரித்ததாய் ஆகும்??? என்னுள் சில கேள்விகள் எழ... அந்த தகவலை மீண்டும் தேடி பிடித்து முழுதாய் படித்தேன்... .அட.... இயல்பான மனிதனுக்குள் இருக்கும் சாதாரண இரக்க உணர்ச்சி தான் அந்த தகவலுக்கு வருந்த வைத்திருக்கிறது..... சற்றே உள் நோக்கி கவனித்து பார்த்தால் மற்ற சில கேள்விகள் எழுகிறது...

அந்த பெண்ணால் பணம் சேர்க்க முடியாமல் போயிருக்கலாம்... ஆனால் இறந்த மகனின் உடலை தூக்கிப்போட நான்கு மனிதர்களை கூடவா சேர்த்திருக்க முடியாது ???

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வனிதா என்ற அந்த பெண்ணின் கணவர், அவர்களின் குழந்தைக்கு (தற்போது இறந்துவிட்ட) 4 வயதாக இருக்கும் போதே அவர்களை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்... உறவினர்கள் யாரும் இவருடன் சேர வில்லை.... அக்கம் பக்கம் குடியிருந்தவர்கள் கூட இவருடன் சேர வில்லை எனில்... அந்த பெண்ணின் குண நலன்களை நம்மால் உணர முடிகிறது தானே????

இது ஒரு எச்சரிக்கை மணி....

நம்மோடு இருப்பவர்களை புறக்கணிப்பதோ... அவர்களுடன் ஒட்டாமல் துண்டித்துக்கொள்வதோ நம்மை எப்படி இந்த உலகத்தில் தனிமைப்படுத்தி தண்டிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்... அக்கம் பக்கம் இருக்கும் நண்பர்களை- உறவினர்களை புறக்கணித்து உலகின் பல்வேறு பகுதிகளில் சிதறி க்கிடப்பவர்களை நண்பனாக வரித்து அவர்களுடன் மட்டுமே பொழுதை போக்காமல் அக்கம் பக்கத்தவருடன்,உறவினர்களுடன் இணைந்திருக்க முயலுங்கள்... காசு பணம் இல்லா விட்டாலும் தூக்கி போட நாலு பேர் வேண்டுமல்லவா?????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக