புதன், 7 செப்டம்பர், 2016

கொடும்பாவி...



சோறு படைத்த சோழநாட்டோட கடைமடை பகுதி எங்க பூர்வீகம்... மண்ணையும் மழையையும் சார்ந்து வாழற மருத நிலத்துக்கு சொந்தக்காரங்க நாங்க.... காவிரித்தாயோட மார்ல சுரந்து வர பால முன்னாடி இருக்க குழந்தைங்க எல்லாம் உறிஞ்சி குடிச்சுட்டு விட்டப்புறம் மிச்சமிருந்தாதான் எங்களுக்கு கிடைக்கும்... 

எங்க விவசாயத்துக்கு முக்கியமான நீராதாரம் மழையும்.. அப்படி பெயர மழைல நிறைஞ்சு கெடக்கும் ஏரி குளங்களும் , வற்றாமல் சுரக்கும் கேணிகளும் தான்...

ஐப்பசி மாசம் மின்னல் வெட்டி, இடியோட பொனுபொனுன்னு தூற ஆரம்பிச்சு.. கொஞ்சம் கொஞ்சமா வலுக்கும் மழை.... ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை முச்சூடும் அடை மழையா பெய்யும்.... இந்த சுழற்சி வருஷா வருஷம் நடக்குறது தான.... பருவகால மாற்றத்துல எல்லா ஊர்லயும் இப்படித்தான நடக்கும்... ?? ஆமாம்.. நீங்க .சொல்றதும் சரிதான்....

இந்த சுழற்சி எப்போதும் போல இந்த கட்டுரைக்கு வேலையே இல்லாம .போயிருக்கும்..

திடீர்னு ஏதாவது ஒரு வருஷ காலத்துக்கு சுத்தமா மழையே பெய்யாது... வறட்சி தாண்டவமாடும்.. ஏரி குளமெல்லாம் வறண்டு போய் பாளம் பாளமா பொருக்கு வெடிச்சு கெடக்கும்... மாடு கண்ணுகளுக்கு குடிக்க தண்ணி கெடைக்காது... கேணில எல்லாம் தண்ணி வத்தி போய்டும்... மர மட்ட எல்லாம் காஞ்சு சருவா தொங்கும்... அனல்காத்தா அடிக்கும்.......

அந்த மாதிரி நேரத்துல எங்க ஊரு பக்கம் , ஊருல இருக்க முச்சந்தில வைக்கோல் பிரிய சுத்தி அதுல , களிமண்ணை பூசி ஒரு ஆள் மாதிரி செஞ்சு படுக்க வச்சிருப்பாங்க...

இதுதான் வருண பகவான வம்புக்கிழுக்கிற வேலை...

எங்கூரு நம்பிக்கை படி அது வருணபகவானோட பொணம்.... வருண பகவான் செத்து போயிட்டார்.. அதனால தான் மழ தண்ணி இல்லாம போச்சுன்னு ஒரு மாயையை ஏற்படுத்துறது... எங்கூர்ல இருக்க எல்லோரும் ராத்திரி சாப்பாட்ட ஏழு எட்டு மணிக்கெல்லாம் முடிச்சுட்டு, அந்த பொணம் கிடக்குற இடத்துக்கு வந்திடுவாங்க.... வந்த ஆம்பளைங்க எல்லாம் ஒரு பக்கமா உக்காந்து ஏதாவது கதை பேசுவாங்க.... பொம்பளைங்க எல்லாம் அந்த களிமண் பொணத்த சுத்தி உக்கார்ந்து ஒப்பாரி வைப்பாங்க....

நெஞ்சுல அடிச்சுகிட்டு சுத்தி சுத்தி அழுவாங்க....

ஏ.... மானத்து ராசாவே....
மழபேயும் மந்திரியே....
கொட்டந்தரையில.....
நா.. கோலத்த போட்டுவச்சேன்....
என்கோலம் அழியலையே...
ஒரு கொள்ள மழ பேயலையே....

இப்படியா அடுத்தடுத்த பல்லவியோட நீளும் அந்த ஒப்பாரி பாட்டு.... அந்த ஒப்பாரில ஒரு ஆத்மார்த்தம் இருக்கும்.. தார தாரயா கண்ணீரு பெருக பெருக அழுது ஒப்பாரி வைப்பாங்க.... அப்படி அங்க அழும்போது, எங்க அம்மா அழுவுதேன்னு நானும் சேர்ந்து அழுத கதையெல்லாம் கூட உண்டு.... சரி அத விடுங்க....

இப்படி ஒரு வாரம் ஒப்பாரி வச்சு அழுவாங்க.... ஏழாம் நாள் ராத்திரி அழுது, ஊரு ஒறவு மொறைல இருக்க மாமன் மச்சினன் எல்லாம் சம்மந்த கொட்டு கொட்டிகிட்டு சேலை, நெல்லு எல்லாம் கொண்டு வந்து போடுவாங்க.... எட்டாம் நாள் காலைல அந்த வருண பகவானோட பொணத்த ( கொடும்பாவிய) இழுத்து கொண்டு போய் வறண்டு கெடக்குற ஏரில போட்டுட்டு வந்திடுவோம்....சொன்னா நம்ப மாட்டீங்க... அதிக பட்சம், அழுவ ஆரம்பிச்ச நாலாம் நாளே மழை வந்துடும்... தவறி போனா... ஏரில கொண்டு போய் போட்டுட்டு வந்தன்னிக்கு ராத்திரி மழை பின்னி எடுக்கும்.. கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீத்துடும்...

அதாவது.." நான் இன்னும் செத்துப்போகல....உயிரோடதான்இருக்கேன்.. இது என்னோட பொணம் இல்ல.." னு வருண பகவானே மழையா இறங்கி வந்து , .. அந்த பொம்மைய (கொடும்பாவிய) கரைச்சு விட்டுடுவாராம்.....

வானம்பாத்து விவசாயம் பண்ணி உலகத்துக்கே சோறு போடுற விவசாயிங்களோட நம்பிக்கை அந்த கொடும்பாவி.... இப்போ மழையும் இல்ல.. ஏரியும் இல்லாம போச்சு.... விவசாயமே இல்லாம போச்சே...நாங்க எங்க இருந்து வருண பகவான வம்புக்கு இழுக்க???

வருணனையே சீண்டிப்பாத்த எங்க நம்பிக்கைக்கு இப்போ வேலையிலாம போயி, நாங்க வேணாம்னு விட்டுட்டோம்.....இப்போ உள்ளவிங்க தனக்கு புடிக்காத கட்சிக்காரங்களையும் ஆட்சியாளர்களையும் அவமானப்படுத்த கொடும்பாவி கொளுத்துறாங்க....

புகைப்படம் - வழக்கம் போல இணையத்தில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக