வியாழன், 20 செப்டம்பர், 2018

மோடி ஊதிய புகைமுட்டி

எங்கூர்ல நாங்க கடலை சாகுபடி செய்றப்போ.... (பார்த்தீங்களா..... உடனே கடலை சாகுபடின்னதும் யாரோ பொண்ணு கூட பேசிகிட்டிருந்த விஷயம்னு உங்களை எல்லாம் இந்த பாழா போன சம்முவம் நம்ப வச்சிருக்கு.... ) சரி... விஷயத்துக்கு வருவோம்..... கடலை சாகுபடி செய்றப்போ..... எலி அங்கங்க வளை பறிச்சு கடலை எல்லாம் கட் பண்ணி கொண்டு போய் பதுக்கிடும்.... அப்போ நாங்க என்ன செய்வோம் தெரியுமா....?? அந்த எலி வலைல புகை முட்டி வச்சு ஊதுவோம்... புகை முட்டி தெரியுமா.... உங்களுக்கு....??

ஒரு சிறிய மண் கலையத்திகுள் (சிறிய அளவிலான பானை) வைக்கோலை நிறைத்து.. பானையின் அடிப்பகுதியில் சிறிய துளை வைத்து... அதில் சில நெருப்பு கங்குகளை போட்டு... பின்புறமுள்ள துளை வழியாக காற்றை ஊதும்பொழுது... தீ கங்குகளின் சூட்டில் உள்ளே இருக்கும் வைக்கோல் மீதும் தீ பரவும்.... இது கனிந்த நெருப்பாக அடர்ந்த புகையை வெளியிடுமே தவிர.... நெருப்பாக எரியாது....

இந்த அடர் புகையை அந்த எலி வலைக்குள் நிரப்பும்பொழுது... உள்ளிருக்கும் எலிகள் தப்பிக்க முயலும்... சில எலிகள் புகையின் தாக்கத்தால் மயங்கி வலைக்குள்ளேயே சிக்கிக்கொள்ளும்.... சில எலிகள் வேறொரு பக்கம் வெளியேறி ஓடும்.... அப்படி ஓடும் அந்த எலிகளை கையில் குச்சியுடன் இருக்கும் வேறொருவர் ஒரே அடியில் வீழ்த்துவார்.... சில சமயம் அதையும் மீறி சில எலிகள் தப்பித்துவிடுவதும் உண்டு...


நிற்க....



விஜய் மல்லையா - எஸ் பி ஐ உள்ளிட்ட நிறைய வங்கிகள்..

நீரவ் மோடி - பஞ்சாப் நேஷனல் பேங்க்

குப்தா - பேங்க் ஆப் பரோடா...

# மேற்கண்ட நபர்கள் எல்லாம் பல ஆயிரம் கோடிக்கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் வங்கியில் / வங்கி உதவியுடன் நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள்...

ஆமாம்..... இத்தனை ஆயிரம் கோடிகளை ஓரிரு மாதங்களிலோ .. ஓரிரு வருடங்களிலோவா ஏமாற்றி இருப்பார்கள்??

"சும்மா கத விட்றானுங்கப்பா.....இதெல்லாம் ரொம்பகாலமா நடந்திருக்கும்... இப்போதான் வெளில வருது...." என்று சொல்ல நீங்கள் பெரிய பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை....

ஆனா இப்போ ஏன் திடீர் திடீர்னு கண்டு பிடிக்கிறாங்க .. அல்லது ஏமாத்தினவனே பிச்சுகிட்டு ஓடறான்???

இப்போ திரும்பவும் ஒரு தடவை "புகைமுட்டி" வேட்டையை நினைவில் கொள்க....

புகை முட்டி ஊதும் வேலையைத்தான் இப்போ மத்திய அரசு பண்ணுது.... இவ்வளவு காலமும் கேப்பாரும் இல்ல... மேய்ப்பாரும் இல்ல.... என்றபடி தேச பொருளாதாரத்தை சுரண்டி கொழுத்தவர்கள் வேறு வழி இல்லாமல் ஓட கூடிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்...

மோடி ஒழிக ன்னு எழுதலன்னா கண்டிப்பா இந்த கட்டுரை நிறைவடையாது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக