வியாழன், 20 செப்டம்பர், 2018

சராசரி குடும்பஸ்தன் பயம்

இதோ தெரிகிறது சென்னை... எப்போதுமே எனக்கு மிரட்சியை தரும் சென்னை இப்போது பறவைப்பார்வையில்... முன்னிரவில் எங்களூர் ஏரிக்கரையில் இருக்கும் கருவேலமரத்தில் அடர்ந்து அமர்ந்திருக்கும் மின்மினி பூச்சிகள் மாதிரி வெளிச்ச புள்ளிகள்... நெருங்க நெருங்க.... வெளிச்சம் விரிகிறது...

அந்த இண்டிகோ நிறுவன இயந்திர பறவை எங்களையும் சுமந்துகொண்டு தாழ... தாழ..... இன்னும் தாழவென தரையிறங்குவதற்கான முஸ்தீபுகளில் இருக்கிறது... அதோ..... மெரீனா கடற்கரை.... அதோ.... அண்ணா சாலை.... அதோ... அந்நாளில் என்னுடன் அன்பாய் பழகி மாரடைப்பால் காலமான அன்புசிவன் அண்ணா வேலை செய்த ஸ்பிக் டவர்...அதோ.... கிண்டி மேம்பாலம்... ஹா... அதோ மீனம்பாக்கம் வானூர்தி நிலையம்... அதோ விமான ஓடுபாதை.....

மடியில் அமர்ந்திருக்கும் ஆதிக்கு எதுவும் புரியாவிட்டாலும் நான் முணுமுணுக்கிறேன்... இருவரும் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.... இன்னும் சில வினாடிகளில் இந்த விமானம் தரை தொட்டு ஓடும்... என்ற எங்கள் எண்ணம் அடுத்த வினாடியே மாறியது...

ஆம்.... ஓடுபாதையை தொடப்போகும் சமயம் மீண்டும் விமானம் மேல் நோக்கி எழும்பி பறக்க ஆரம்பித்தது... ஏன்... என்னாச்சு.... எதுவும் பிரச்சினையா... விமான பயணிகளின் முகங்களில் பயம், பீதி, கலவரம் , சந்தேகம்... எதிர்பார்ப்பு என கலந்துகட்டிய பாவங்கள்...

மேலெழும்பிய விமானம் மீண்டும் வங்காள விரிகுடாவின் மீதும்... சென்னை நகர் மீதும் சற்றேறக்குறைய இருபது நிமிடங்கள் வட்டமிட.... மீண்டும்.... அதோ..... மெரீனா கடற்கரை.... அதோ.... அண்ணா சாலை.... அதோ... அந்நாளில் என்னுடன் அன்பாய் பழகி மாரடைப்பால் காலமான அன்புசிவன் அண்ணா வேலை செய்த ஸ்பிக் டவர்...அதோ.... கிண்டி மேம்பாலம்..

ஆனால்... அரை மணி நேரம் முன்பாக இருந்த அந்த ஆச்சர்ய மகிழ்ச்சி இம்முறை சற்று குறைந்திருந்தது... இன்னும் சொல்லப்போனால் இல்லாமலே இருந்தது....



ஏதேனும் இயந்திரக் கோளாறாய் இருக்குமோ... விமானத்தின் சக்கரம் வெளியில் வராமல் சிக்கி இருக்குமோ.... ரன்வே கிளியர் இல்லை என்றால் விமானிக்கு சிக்னல் கிடைத்திருக்காதே..... பிறகெப்படி அவர் ஓடுபாதை வரை வருவார்.... இல்லை... எதோ பிரச்சினைதான்... பார்க்கலாம்... எப்போதுமே மூன்றாவது கோணத்திலேயே யோசித்து பழகிய மனசு... இப்போதும் அப்படியே....

பொதுவாக விமான , ரயில் பயணங்களில் காப்பீடு செய்யாமல் பயணிப்பதில்லை என்றாலும்... இம்முறை குடும்பத்துடன் இதே விமானத்தில்... காப்பீட்டை என்ன செய்ய...

அட்ரினல் சுரப்பிகள் அதி வேகமாய் வேலை செய்தன...

அடுத்த இருபது நிமிடத்தில் ஒரு பெரிய குலுங்கலுடன் அந்த அல்லாய் பறவை ஓடுபாதையை தொட்டு உலா வந்து இளைப்பாறியது....
அப்ப்பாடா.... தப்பிச்சோம்டா....

மீண்டும் அதே இண்டிகோ... காப்பீடு செய்திருக்கிறேன்... இப்போது தனி... அதனால் கவலை இல்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக