சனி, 9 மே, 2015

யாருக்கும் வெட்கமில்லை

கூரையை சரிக்க முயலும் தூண்கள்...

மத்திய அரசு முதல் மாநில அரசு வரை முதல் குடிமகன் முதல் கடைசி மனிதன் வரை, படித்தவர் முதல் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் வரை, பத்து ரூபாய் திருடியவர் முதல் ஒருலட்சத்து எழுபத்தாராயிரம் கோடி ரூபாய் திருடியவர் வரை எல்லோரையும் கேள்வி கேட்கும் அதிகாரம் மிக்க அமைப்பு நீதி துறை மட்டுமே... சில பல விஷயங்களில் அந்த நீதி துறையை சேர்ந்தவர்களும் விலை போனாலும் கூட இன்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை தக்க வைத்திருப்பது நீதி துறை மட்டுமே..

இத்தகைய நீதி துறையும் உயர்ந்த நாற்காலிகளில் அமர்ந்து அரசையோ மக்களையோ கேள்வி கேட்க வேண்டுமானால் அவர்கள் நிச்சயம் சட்ட வல்லுனர்களாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு மருத்துவ தொழில் செய்பவரோ- பொறியாளர் தொழில் செய்பவரோ , இன்னும் படித்து/ படிக்காமல் ஏனைய தொழில் செய்பவரோ இந்த பதவிக்கு வந்து விட முடியாது.. இந்த நாற்காலியை அலங்கரிக்க கூடிய தகுதி உடையவர் நிச்சயம் சட்டக்கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 
இன்றைய இந்திய மக்களின் நம்பிக்கை நீதியரசர்கள் அனைவருமே நேற்றைய சட்டக்கல்லூரி மாணவர்கள்... இன்றைய சட்டக்கல்லூரி மாணவர்கள் நாளைய நீதி அரசர்கள்.. நாளைய இந்தியாவின் அதிகாரிகள் நேர்மையாக பணி செய்கின்றனரா, அரசு முறையாக செயல் படுகிறதா, மக்கள் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பதை கண்காணிக்கவும் இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு குந்தகம் ஏற்பட்டால் தலையில் குட்டி கேள்வி கேட்கவும் வல்ல இன்றைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறார்கள்... அவர்களின் கோரிக்கையில் ஒன்று "இலவச மடி கணினி " வழங்காததை கண்டித்து...
ஓட்டு போடுவதுடன் நம் கடமை முடிந்தது.. கிடைத்த ஆயிரம் ஐநூறு ரூபாய்கள் நமக்கு லாபம் என்ற எண்ணம் கொண்ட பாமர மக்கள் இலவசம் கேட்டு போராடினார்கள்.. அவர்களை பற்றி நாம் வருத்தப்படவேண்டுமே தவிர கோபம் கொள்ள முடியாது.. ஏனென்றால் கல்வியை- வேலை வாய்ப்பை- விழிப்புணர்ச்சியை உருவாக்க வேண்டிய அரசாங்கங்கள் L அவர்களை இலவசத்திற்கு ஏங்கி காத்திருக்கும் ஏமாளி கூட்டமாய் மாற்றி வைத்திருக்கிறது..
நம் கோபம் அரசாங்கத்தின் மீது தான் திரும்ப வேண்டும்..

ஆனால் படித்த விபரம் புரிந்த நாளைய இந்தியாவை வழிநடத்த போகிற சட்ட கல்லூரி மாணவர்கள் இலவசம் கேட்டு போராடுகிறார்கள் என்றால்.. இவர்கள் தான் நாளை இந்தியாவின் நீதியை நிலை நாட்டி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க போகிறார்களா???
இப்படி ஒரு போராட்டம் நடத்த உங்களுக்கு வெட்கமாக இல்லை????

என்னுடைய நண்பர்கள் பட்டியலில் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.. சட்டக்கல்லூரி மாணவர்கள் இருக்கலாம்... உங்களை காயப்படுத்தும் நோக்கம் இல்லை... "யு டூ ப்ரூட்டஸ்..." என்ற சேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற வசனம்.. நம்பிக்கை துரோகி ஆகி விட்டாயே .. என்ற ஆதங்கம்... நீங்கள் இந்த நாட்டை பாதுகாப்பீர்கள்... நேர்வழியில் முன்னேற்றி செல்வீர்கள் என்ற நம்பிக்கை பொய்த்து போய் விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோடானு கோடி இந்தியர்களில் ஒருவனின் கேள்வி... என்ன பதில் சொல்ல போகிறீர்கள்???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக