சனி, 9 மே, 2015

விஸ்வரூபம்

ஒரு வழியாய் அக்கினி குஞ்சின் மீது மழை பெய்திருக்கிறது... ஆனால் அந்த அக்கினி குஞ்சு மரப்பொந்திடை வைக்கப்பட்டு மழை பெய்யும் காலத்திற்குள்ளாக அதனை குரங்குகள் எல்லாம் தூக்கிப்போய் பல மரங்களில் பற்றவைத்திருக்கிறது...

விஸ்வரூபம் எடுத்த விஸ்வரூப பிரச்சினையில் வெளியில் தெரியாமல் இருந்த லெட்டர்பேட் குழுக்களும், சில தனிமனித பிரபலங்களும் , சில பல பாரம்பரிய பேரியக்கங்களும், மக்களாட்சியையே மன்னராட்சி ஆக்கிய பேரரசர்களும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குளிர்காய்ந்திருக்கிறார்கள்.

கமலஹாசன் அவர்கள் நூறுகோடி ரூபாய் முதலீட்டில் எல்லோரையும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்...பிரதிபலனாக எல்லோரும் அவர் படத்தை விளம்பரபடுத்தி இருக்கிறார்கள்..

"எரியும் வீட்டில் பிடுங்கின வரை லாபம் " என்றும் , "வெந்தது போதும் என் முந்தானைல போடு " என்றும் எம் முன்னோர்கள் சொல்லிச்சென்றதை செயல் விளக்கமாய் செய்து காண்பித்த எல்லோரையும் பார்த்து மிரட்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது...
அன்பு செல்வன் என்ற அழகான பெயரை அன்பு செல்வன் ஐ பி எஸ் என்று கதாநாயகனுக்கு வைத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனை புகழ்ந்த ஒரு படித்தவர் அதே மேனன் இன்னொரு படத்தில் அமுதன்- இளமாறன் என்று தமிழ் பெயர்களை வில்லன் கதாபாத்திரத்திற்கு சூட்டிய பொது அதற்கு காரணம் கமல் தான் என்ற ஒரு அற்புத கண்டுபிடிப்பை நிகழ்த்தி அடுத்த நோபல் பரிசுக்கான பரிந்துரையை பெற்றிருக்கிறார்...

எது எப்படியோ.. ஒரு கலைஞனாய் , முதலீடு செய்தவனாய் தனுடைய படைப்புக்கும் பணத்திற்கும் இப்படி ஆபத்து வருகிறதே என்று கமலஹாசன் ஆதங்கப்பட்டது நியாயம். அந்த ஆதங்கமே நான் வேறு மாநிலத்திலோ வேறு நாட்டிலோ கூட குடியேறிவிடலாம் என்று நினைக்கிறேன் என்று அவரை சொல்ல வைத்தது... ஒரு கலைஞனை அப்படி வேதனைப்பட வைத்ததற்காக வெட்க்கப்பட்டோரையும்... 
கமலஹாசன் என்ற சிந்தனையாளனுக்கு தார்மீக ஆதரவு கொடுத்த அனைத்து தரப்பினரையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் கமலஹாசன் இந்த நாட்டை விட்டு போனால்.. வேறு மாநிலத்திற்கு போனால்... நாங்கள் எங்கள் ரேஷன் கார்டை ஒப்படைப்போம் என்று ஒரு கும்பல் சொல்கிறதே. அதை என்னென்று சொல்ல???

கமலஹாசன் எங்கு வேண்டுமானாலும் குடியேறி விடுவார். ரேஷன் கார்டை கொடுத்துவிட்டு நீ எங்கே போவாய்..??? கமலஹாசனின் பின்னால் அவரது குடும்பம் போகும்... உன் குடும்பம்...???

ஒரு திரைப்படத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் வதந்திகளால் ஆபத்து வருகிறது என்ற உடன் அந்த கலை படைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தது நியாயம்... ஆனால் அரசியல் கட்சி ,,, அடுத்த முதல்வர் என்கிறாயே.... 

அட முட்டாள் தமிழா.. அறிவார்ந்து சிந்திக்க உனக்கு ஏனடா தெரியவில்லை??? உணர்சிகளுக்கு அடிமையாகி...... நீ ஒவ்வொரு முறையும் செய்த தவறால் தான் சுமார் அரை நூற்றாண்டுகள் அரசியல் வியாபாரம் செய்தும், சினிமா வியாபாரம் செய்தும் உன்னை ஒரு சிறு கும்பல் அடிமையாகவே வைத்திருக்கிறது.. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இப்படி இருக்க போகிறாயோ.!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக