செவ்வாய், 28 ஜூலை, 2015

இந்தி- கற்றுக்கொள்வது குற்றமா??



சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தி என்ற மொழி தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது என்று மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க கூடிய புகைவண்டி நிலையங்கள், தபால் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை பெயர்பலகைகள் போன்றவற்றில் இருந்த இந்தி எழுத்துக்களை எல்லாம் அழித்து, பள்ளி மாணவர்கள், கல்லூரிமாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை "தமிழ் இனிமேல் அழிந்தே போய் விடும்" என்று உணர்ச்சிகளை தூண்டிவிட்டு , தாளமுத்து, நடராசன் போன்றோரின் உயிர்களை காவுகொண்டு நிகழ்த்தப்பட்ட "இந்தி எதிர்ப்பு போராட்டம்" தற்போது "இஷ்டப்பட்டவர்கள் படிக்கட்டும்.. கட்டாயப்படுத்த கூடாது" என்ற அளவில் மாறுபாடு அடைந்திருக்கிறது....

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தோமானால்... யாரெல்லாம் அப்படி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டார்களோ, அவர்களின் வாரிசுகள் அந்த "இந்தியை" கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.. அநியாயமாய் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டிருப்பது நாம் தான் என்று இன்றளவில் பெருவாரியான மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்... அன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட எல்லோருமே தமிழகத்தில் மட்டும் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள்... அவர்களுக்கு இந்தி என்பதோ, ஏன்.. ஆங்கிலம் என்பதோ கூட அவசியமின்றி இருந்தது... ஆனால் இப்போது இருக்கும் அடுத்த தலைமுறை தம்முடைய வாழ்வை வளமாக்கிக்கொள்ள வேண்டுமானால் தமிழகத்தில் மட்டும் இருந்தால் பத்தாது.. வட இந்தியாவிற்கோ, வளைகுடா நாடுகளுக்கோ போய்தான் ஆகவேண்டும் என்ற நிலையை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.. (உலகின் மற்ற நாடுகளுக்கு தமிழ் இளைஞர்கள் போனால் அங்கே இருக்கும் பாஷையை ஓரளவுக்காவது கற்றுக்கொள்ள முனைகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது... ஜப்பானில் இருப்பவர்கள் ஜப்பானீஸ் மொழியையும், பிரான்ஸ் நாட்டில் இருப்பவர்கள் பிரெஞ்ச் மொழியையும் முடிந்தவரையில் கற்கிறார்கள்)

அந்த மொழிகளை கற்றுக்கொண்டு நாம் அந்த மொழியில் இலக்கியம் படைக்கப்போவதில்லை என்றாலும் கூட நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவாவது அதை ஓரளவு கற்கவேண்டிய கட்டாயம்.. மேலும் அதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்.. போன்றவைதான் காரணம்...

அந்த வகையில் வளைகுடா நாடுகளை பொருத்தவரை அரபி மொழிக்கு பிறகு இந்தியும், ஆங்கிலமுமே கோலோச்சுகிறது என்பது அனுபவ உண்மை... அரபு நாட்டவர்கள், ஈரானிகள் இந்தி மொழியை வெகு சரளமாய் பேசும் வல்லமை பெற்று இருக்கிறார்கள்... அவர்களுக்கு என்ன அவசியம் என்றால்... அவர்களிடம் கூலிக்கு வேலை செய்யவரும் வேலை ஆட்களிடம் வேலை வாங்க அந்த மொழி அவசியப்படுகிறது....

பகுதி மக்கள் விழித்துக்கொண்டார்கள் என்றபிறகு "அறவே கூடாது" என்ற நிலையில் இருந்து "இஷ்டப்படா படிக்கட்டும் . கட்டாயப்படுத்த கூடாது" என்ற நிலைக்கு வர நாற்பது ஆண்டுகள் ஆகி இருக்கிறது.. இல்லை இல்லை... கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்ற நிலையை எட்ட அடுத்த இருபது ஆண்டுகள் எடுக்கலாம்...

ஏனென்றால் இந்தி படித்தால் நமக்கு வேலை கிடைக்கும் என்பதால் அல்ல.. நம்மிடம் வேலைதேடிவரும் வட இந்திய கூலிகளிடம் வேலை வாங்குவதற்காக என்று வைத்துக்கொள்வோமே...

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக