திங்கள், 27 ஜூலை, 2015

உழுபவனுக்கே நிலம் சொந்தம்

தெக்கி சீமையிலையும், கீழ சீமையிலையும் சுமார் பத்து பதினஞ்சு வருஷம் மழ தண்ணி இல்லாம கம்மா எல்லாம் காஞ்சு தரிசுக்காடா போச்சு......
மாடு கன்னெல்லாம் தண்ணி இல்லாம செத்துப்போச்சு..... கண்ணுக்கெட்டிய தொலவுக்கு சீமக்கருவ மரத்த தவிர வேறொன்னும் காணல...... அப்போ.. சோழ சீமைல நல்ல மழைதண்ணி, காவிரி தண்ணின்னு வெவசாயம் செழிப்பா இருந்துச்சு.....
புள்ளகுட்டியளாச்சும் காப்பாத்துவோம்னு கைல கெடச்ச பண்டம் பாத்திரங்கள எடுத்துகிட்டு சோழ சீமைக்கு (தஞ்சாவூர்) வந்து சேந்தவங்க பல பேரு....

சும்மா சொல்லக்கூடாது.... சோழ சீமைக்காரங்க தங்கம்...... வந்தவங்களுக்கு அவங்க அவங்க தோப்புலையோ, காலி மனைலையோ ஒரு கொட்டகை போட்டு தங்க வச்சாங்க.... விவசாய வேலையும் தொடந்து இருந்துச்சு......

வருஷத்துக்கு ஒருக்காதான் சொந்த ஊருக்கு போறது..... தாயமங்கலம் மாரியாத்தா கோயிலு தேர் திருவிழா ..... நாட்டரசன் கோட்டை கண்ணாத்தம்மன் கோயிலு மொளப்பாரி திருவிழா.. இப்படி எதுக்காச்சும்..... போயிட்டு ஒரு வாரம் பத்து நாள்ல சொந்தம் சோலி எல்லாம் பாத்துட்டு மறுபடியும் சோழ சீமைக்கே வந்திடுவாங்க......

அவங்க புள்ளைங்களும் இங்கனயே பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்கவும் வச்சாங்க... இதெல்லாம் முப்பது முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உள்ள கத..... அப்புறம் புள்ளைங்கல்லாம் வளந்துட்டாங்க......நல்லா படிச்சு வேற வேற வேலைல சேர்ந்துட்டாங்க..... அங்கன பஞ்சமும் தெளிஞ்சு போச்சு..... எல்லோரு போய் ஊர் நாட்டோட, மக்க மனுஷங்களோட சேந்துட்டாங்க....இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலமா இங்கனயே தங்கினவங்கள்ள சில பேரு மட்டும் திரும்ப ஊருக்கு போக மனசில்லாம வழக்கம் போல வருஷம் ஒருக்கா போயிட்டு திரும்ப சோழ சீமைக்கே வந்துடுவாங்க..... சோழ சீமை இப்போ முன்ன மாதிரி இல்ல... இங்கனயும் மழ தண்ணி கொறஞ்சு போச்சு... வெவசாயம் கொறஞ்சு போச்சு.. காவிரில தண்ணியும் வரத்து கொறஞ்சு போச்சு...... 

இருந்தாலும், இங்கயே பழகிட்ட அவங்களால மறுபடியும் தெக்கிச்சீமைக்கு போக விரும்பல...... சும்மா சொல்ல கூடாது..... முப்பது முப்பந்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புள்ளைகுட்டியோட கைல கெடச்ச சாமாஞ்செட்ட தூக்கிட்டு கைய பெசஞ்சிகிட்டு நின்னப்போ ஆதரிச்ச சோழ சீமக்காரங்களுக்கு இன்னிக்கும் நன்றி விசுவாசமாத்தான் இருக்காங்க.....

அப்புறம்...... எங்க நாலு ஞாயக்காரங்க இருந்தாலும் ஒரு நன்றி மறந்தவனும் இருப்பாந்தானே..... முப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்து எப்படி நின்னோம்ன்றத மறந்துட்டு..... யார் வீட்டு தோப்புல கொட்டகை போட்டு குடி வச்சாங்களோ..... அந்த தோப்பு எனக்குதான் சொந்தம்னு சொல்றான்.... கேட்டா.. "உழுபவனுக்கே நிலம் சொந்தம்னு சட்டமே இருக்கு"ன்னு ரூலு பேசுறான்......

இவன எப்படியாவது கவுக்கனும்னு உள்ளூர்ல நாலு நாதாரிங்க எப்பவும் சுத்துமே.... அதுங்கள்லாம் அவன ஏத்தி விட்டு.. நீ விடாதடா... இல்லன்னா நாலு லட்சம் கேளு.. அஞ்சு லட்சம் கேளுன்னு உசுப்பி விடுறாய்ங்க........ எவன் அப்பன் வீட்டு சொத்துடா ... ஒண்ட இடம் கொடுத்தா சொத்துல பங்கு வேணுமா உனக்குன்னு கோபமா வருது.... ஆனா சட்டத்த காட்டி ஒரு கும்பல் அதுக்கு ஜால்ரா அடிக்குது...... அப்போ சட்டம் போட்டா எல்லாத்தையும் விட்டுடனுமா?? ஒரு நாய தர்மம் கிடையாதா......??? 

இதுல ஒரு காமெடி பாருங்க....... அன்னிக்கு அவன் முப்பது வருஷமா அங்கதான் இருக்கான்.. அந்த இடம் அவனுக்குதான் சொந்தம்னு பேசினவங்க எல்லோருமே... இன்னிக்கு சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தம்னு சொன்னா கொதிக்கிறாங்க...... இது தப்புன்னா அதும் தப்புதானே........ பாவம் புண்ணியத்துக்கு கொட்டகை போட்டு தங்க இடம் கொடுத்தா சொத்துல பங்கு வேணும்ங்கிற சட்டத்தையும் மாத்தணும் தானே......????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக