வியாழன், 29 ஜூன், 2017

நிவாரண நிதி

காஞ்சிபுரம் பகுதியில் நான் பணி புரிந்து கொண்டிருந்த நேரத்தில் நான் குடியிருந்த தெருவில் ஒரு கீற்று வேய்ந்த வீடு தீப்பற்றிக் கொண்டது... அக்கம் பக்கம் இருந்தவர்களும் , எரிந்த வீட்டில் இருந்தவர்களும் சேர்ந்து வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியில் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்...

தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தது...அப்போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு எஸ் எஸ் திருநாவுக்கரசு அவர்கள் மறைந்ததால் நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி திருமதி மைதிலி திருநாவுக்கரசு அவர்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி இருந்தார்...
Image may contain: 1 person
காஞ்சிபுரம் பகுதியை ஒட்டி அமைந்திருந்த பகுதி ஆகையால் அடுத்த ஒரு மணி நேரத்தில் திருமதி மைதிலி அவர்கள் அங்கே வந்தார்... பொருட்களை வெளியில் போட்டுக்கொண்டு அழுதுகொண்டு நின்ற பெண்ணிடம் உடனடி நிவாரணமாக 5000 ரூபாய்களை வழங்கினார்... அடுத்த சில மணி நேரத்தில் மற்ற கட்சிகாரர் ஒருவர் 2000 கொடுக்க, அரசு சார்பில் 10000 நிதி கொடுக்கப்பட.... சில மணி நேரங்களிலேயே சுமார் இருபதாயிரத்திற்கான இழப்பீடு அந்த பெண்மணிக்கு உறுதி செய்யப்பட்டது....

நிற்க....
இங்கே தான் தொடங்குகிறது வேடிக்கை.... இழப்பீட்டை பெற்ற பெண் உடனடியாக காலியாக இருந்த வேறொரு வீட்டில் குடியேறிவிட்டார்... ஏனென்றால் எரிந்தது அவரது சொந்த வீடு அல்ல.... வீடு எரிந்ததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை... ஒரே ஒரு பொருள் கூட தீயில் பாதிக்கப்படாமல் உடனடியாக வெளியேற்றப்பட்டது.... பொருட்களை அள்ளிக்கொண்டு வீடு மாறியதை தவிர வேறு எந்த இழப்பும் அவருக்கு இல்லை... ஆனால் நிவாரண தொகை முழுவதையும் அவர் கைப்பற்றி விட, வீட்டின் உரிமையாளருக்கும் அவருக்கும் பிரச்சினை கிளம்பியது....


(அந்த பிரச்சினை எப்படி சரி செய்யப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை...)
ஆனால், இந்த சம்பவத்தில் ஒரு சாமானியனின் பார்வை.... இப்படி இருக்கிறது

நியாயமாக வீட்டின் உரிமையாளருக்கு தான் அந்த நிவாரணத்தொகை சென்று சேர்ந்திருக்க வேண்டும்... குறைந்தபட்சம் 70 சதவிகிதமாவது சம்மந்தப்பட்ட குடியிருந்தவர் , வீட்டின் உரிமையாளருக்கு கொடுத்திருக்க வேண்டும்... அதுவே நியாயம்-தர்மம்.. இழப்பு வீட்டின் உரிமையாளருக்கு மட்டுமே....

இப்போது வெள்ள நிவாரணத்தில் இதே போன்ற ஒரு பிரச்சினை எழுகிறது.. ஆனால் சாமான்யனின் பார்வை இங்கே வேறு விதமாக இருக்கிறது.. ஆம்... இந்த மழை வெள்ளத்தில் பாதிப்பு என்பது குடியிருந்தவர்களுக்குத்தான் அதிகம்... மொத்த பொருட்களையும் இழந்தவர்கள் அவர்கள் தான்.. வீட்டின் உரிமையாளருக்கு மின் இணைப்பு உபகரணங்கள் மற்றும் வீட்டிற்கு பெயின்ட் செய்தல் போன்ற வகையில் செலவு ஏற்படும்..


வாடகைக்கு குடியிருப்பவர்களிடம், வீட்டின் உரிமையாளர் எந்த வித பிரச்சினை செய்யவும் நியாய- தர்ம வழிமுறை கிடையாது... குடியிருப்பவர் மனது வைத்தால் கொஞ்சம் பகிரலாம்...

அட போங்கப்பா..... இலவசமா கிடைக்கிற சோத்து பொட்டலத்துல ரெண்டு பொட்டலம் அமுக்குறவனும், நாலஞ்சு பெட்ஷீட் வாங்குறவனும் தான் பகிரப்போறான்- விட்டுக்கொடுக்க போறானா....???
போங்க போங்க... வேலை ஏதாவது இருந்தா பாருங்க.... நியாயமாம்.. தர்மமாம்.. மனச்சாட்சியாம்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக