வியாழன், 29 ஜூன், 2017

சகாயத்தை ஒழிக்க ஒரு சாணக்ய தந்திரம்

நாட்டின் அதிபரை நேரடியாக மக்களே தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் சில நாடுகளில் உண்டு.. இலங்கை.. அமெரிக்கா போன்ற நாடுகளை இந்த வரிசையில் சொல்லலாம்.... அப்படி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, அவர் ஒரு கட்சியை சார்ந்து இருப்பார்... அந்த கட்சியை சேர்ந்த அவரது ஆதரவாளர்களும் வெற்றி பெற்று ஆட்சி நடத்துவார்கள்...
Image may contain: 3 people

ஆனால், இந்திய தேர்தல் முறை அப்படி அல்ல.... இவர்தான் பிரதமர் என்றோ, இவர்தான் முதல்வர் என்றோ மக்கள் முடிவு செய்வது இல்லை... பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற சம்மந்தப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள் இவர்தான் முதல்வர்/பிரதமர் என்று ஒருமனதாக தேர்ந்தெடுப்பார்கள்..



காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நேருவின் குடும்பத்தை சேர்ந்த எவரேனும் ஒருவரை மக்கள் முன் நிறுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் சோனியாவையும், ராகுல் காந்தியையும் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறது.... அரசியல் அனுபவமும், சாணக்கியத்தனமும் நிறைந்த நிறைய பெருந்தலைகள் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர்கள் தேசிய அளவில் மக்கள் செல்வாக்கில்லாதவர்கள்.. அதனாலேயே அவர்கள் முன் நிற்பதில்லை...



பாரதீய ஜனதாவில் நேற்று வரை அத்வானி மட்டுமே அறியப்பட்ட பெருந்தலைவர் என்ற நிலையை மோடி என்ற வசீகரம் வந்து எளிதாக மாற்றிவிட்டதை சமகால வரலாறு சொல்லும்...


மாநில கட்சிகளை பொறுத்தவரை கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் (அன்புமணி) போன்ற இவர்கள் தான் அந்த கட்சி வெற்றி பெற்றால் முதல்வர்.. இவர்களை மீறி வேறு எவரும் விரல் கூட அசைக்க முடியாது.... இவர்கள் வெற்றி பெற்றால்.... முதல்வர் ஆனால்...... இவர்களின் விரல் அசைவிற்கு ஆடும் பொம்மைகளையே மந்திரிகளாக நியமிப்பார்கள்...

தி மு க வில் கூட தலைமையை மீறி , சில-பல சுய முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களை மந்திரிகள் பெற்றிருப்பார்கள்... அப்படிப்பட்ட மந்திரிகள் வெண்ணெய்க்கு தொண்ணை ஆதாரமா..... தொண்ணைக்கு வெண்ணெய் ஆதாரமா என்ற நிலையில் இருப்பவர்கள்... இதற்கு உதாரணம்.. சேலம் வீரபாண்டி ஆறுமுகம், வேலூர் துரைமுருகன் போன்றவர்கள்... அந்தந்த பகுதிகளில் அவர்கள் சொந்த செல்வாக்குடன் தி மு க என்ற பிளாட்பாரத்தில் இயங்குபவர்கள்..

ஆனால் அ தி மு க வை பொறுத்தவரை அப்படியான எந்த தலையும் இல்லவே இல்லை.... எல்லாமே தலைமையின் நூலுக்கு ஆடும் பொம்மலாட்ட தோல் பொம்மைகள்.... அப்படி இருந்தும் கூட கையாடலுக்கோ- ஊழலுக்கோ- சட்ட வரம்பு மீறலுக்கோ குறைவில்லை....

இதுதான் இன்றைய இந்திய- தமிழக அரசியல் நிலவரம்..

இப்படி இருக்கையில், "சகாயம்" என்ற ஒரு தனி மனிதனை முதல்வர் என்ற பதவிக்கு முன்னிறுத்தி ஒரு கும்பல் கிளம்பி இருப்பது ஆச்சர்யம்... அதிலும் இந்த கும்பலில் பெரும்பாலானோர் கல்வி அறிவு பெற்றவர்கள்... அவர்களுக்கு தெரியாதா.... நமது நாட்டு சட்டத்தில் முதல்வரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது என்பது???


அட.. அப்படியே சகாயத்தை முதல்வராக்கி விடுவோம்.... சகாயம் என்ற ஒரு தனிமனிதன் நேர்மையாக இருக்கலாம்... ஆனால் அந்த ஒரே ஒரு மனிதன் நேரடியாக எல்லா துறைகளையும் கவனிப்பாரா...??

ஒரு தனி மனிதனின் ஆட்சி இங்கே நிகழ வேண்டும் என்றால் ஒன்று ராணுவ ஆட்சியாக இருக்க வேண்டும்.. அல்லது ஜெயலலிதா போல ஒரே ஒரு நபர் மட்டுமே மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்க வேண்டும்..


மேற்சொன்ன எந்த வரையறைக்குள்ளும் வராத சகாயம் அவர்களை அவர் நேர்மையானவர் என்ற ஒரே ஒரு தகுதியை மட்டும் வைத்து முதல்வராக்குவோம் என்று ஒரு கும்பல் கிளம்பி இருப்பதை, அதற்கு கண்மூடித்தனமாக ஆதரிக்கும் முட்டாள்களை போல சாமான்யனால் சிந்திக்க முடியாது....



அப்படியானால் சாமான்யனின் கோணம்...???


கார்பொரேட் கோமாளி அன்னா ஹசாரே வை அடுத்த பிரதமராக்குவோம் என்று ஒரு கும்பல் கிளம்பியதை போல... அடுத்த சில நாட்களிலேயே ஹசாரே ஒரு கார்பொரேட் கை கூலி, அவர் நடத்திய உண்ணாவிரதங்கள் கார்போரேட்களால் திட்டமிடப்பட்டு, ஊடகங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நாடகம் என்பது அம்பலமானது....

அதுபோல, சகாயம் முதல்வர் என்ற பெயரில் நடந்த இந்த ஊர்வலம் (பேரணி??) யாரால் ஒருங்கினைக்கப்பட்டது,,, இதற்கு செலவு செய்தவர்கள் யார்.. என்ற பின்னணியை தோண்ட வேண்டும்... ஏனென்றால் சகாயத்தை ஒழிக்க . சகாயம் அவர்களின் நேர்மையால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு தொழிலதிபரின் தெளிவான திட்டமிடலாகவே இது தெரிகிறது ...

முதல்வர் என்று ஒரு ஆள் திடீரென கிளம்பினால் அவரின் பின்னால் சிலர் கூடுவதை கண்டால் உடனடியாக ஆளும் அரசோ- மற்ற அரசியல் கட்சிகளோ சம்மந்தப்பட்ட நபரை எதிரியாக நினைக்க ஆரம்பித்து அவரை ஒழிக்க முற்படுவார்கள்.... சிலருக்கு மட்டும் எதிரியாக இருந்த சகாயத்தை ஒட்டுமொத்த அரசியல்கட்சிகளுக்கும் எதிரியாக்கும் நூதன காய் நகர்த்தலே இந்த ஊர்வலமும்- பேரணியும்...


இதன் பின்னணி எதுவுமே தெரியாமல் எப்போதும் போல உணர்ச்சிக்கு மட்டும் அடிமையான கோஷம் போடும் கும்பல் "சகாயம் வாழ்க" என்று கிளம்பி இருக்கிறது....




அட முட்டாள்களே.. நீங்கள் எங்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போட்டீர்களோ.. அங்கே எல்லாம் உங்கள் கோஷம் சம்மந்தப்பட்டவர்களின் அழிவுக்குத்தான் துணை போகிறது... சகாயத்தையும் அழித்து விடாதீர்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக